கோவையில் தடுப்பணையில் மூழ்கிய 3 சிறார்கள்; வெப்பம் தாங்காமல் நீர் நிலைக்கு சென்றபோது சோகம்

By Velmurugan sFirst Published Apr 24, 2024, 8:08 PM IST
Highlights

கோவையில் தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் மூன்று பேர் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடுமையான வெப்பம் பதிவாகி வருகிறது. இன்று 43 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகமும் அறிவுறுத்தியுள்ளது. கடும் வெப்பத்தில் இருந்து தப்பிப்பதற்காக நீர்நிலைகளை நோக்கி சுற்றுலா பயணிகள் படை எடுக்க துவங்கியுள்ளனர். 

கோலாகலமாக நடைபெற்ற கூத்தாண்டவர் கோவில் விழாவில் தாலியை அறுத்துக் கொண்டு ஒப்பாரி வைத்த திருநங்கைகள்

இந்த நிலையில் கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள முண்டந்துறை தடுப்பணையில் தற்போது 12 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதன் மொத்த உயரம் 40 அடி ஆகும். இங்கு இன்று மாலை 4 மணி அளவில் பேரூர் அருகில் உள்ள தீத்திபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வரும் பிரவீன் (17), தக்சன் (17), கவின் (16), ஆகியோருடன் சஞ்சய் (21) ஆகிய நான்கு பேர் குளிப்பதற்காக சென்றிருந்தனர். 

வனவிலங்கு வேட்டை; எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பருக்கு போலீஸ் வலை

அனைவரும் குளித்துக் கொண்டிருந்தபோது நீச்சல் தெரியாத பிரவீன், கவின், தக்சன் ஆகிய மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து சஞ்சய் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர், நீரில் மூழ்கிய மூவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து காருண்யா நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே பள்ளியில் பயிலும் மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கி பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

click me!