
டென்னிஸ் சங்கம் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்தே ஓரளவு ஆதரவே கிடைக்கிறது. எனவே ஐரோப்பிய நாடுகளின் தரத்தோடு போட்டியிடுகிற அளவுக்கு இந்தியாவில் கட்டமைப்பு தேவை என இந்திய டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா தெரிவித்துள்ளார்.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் கனடாவின் கேப்ரில்லா டப்ரோவ்ஸ்கியுடன் இணைந்து சாம்பியன் பட்டம் வென்றார் போபண்ணா.
கிராண்ட்ஸ்லாம் போட்டியில் பட்டம் வெல்லும் கனவு 14 ஆண்டுகளுக்குப் பிறகு போபண்ணாவுக்கு நனவாகியிருப்பதன்மூலம் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் பயஸ், பூபதி, சானியாவுக்குப் பிறகு பட்டம் வென்ற 4-ஆவது இந்தியர் என்ற பெருமை பெற்றுள்ளார்.
போபண்ணா, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயலை டெல்லியில் நேற்று சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
அதன்பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
“ஒருபோதும் லட்சியத்தை கைவிடக்கூடாது. அதை இந்த வெற்றியின் மூலம் நான் உணர்ந்து கொண்டேன். வயது என்பது வெறும் எண் மட்டுமே. சாதனைக்கு காலவரையறை எதுவும் கிடையாது.
நீங்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்து கடுமையாக உழைக்கிறபோது உங்களின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. நான் ஒவ்வொரு நாளும் எனது இலக்கை மனதில் வைத்தே கடுமையாக உழைத்தேன்.
இந்த நேரத்தில் எனது பயிற்சியாளர் குழுவுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். டென்னிஸ் தனிநபர் விளையாட்டாக இருந்தாலும், அதிலும் பலருடைய பங்களிப்பு இருக்கிறது.
ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்வதற்கு ஒருவர் டென்னிஸ் விளையாடத் தொடங்கும்போதே அவருக்கு முறையான கட்டமைப்பு தேவை. ஆனால் இங்கே நமக்கு டென்னிஸ் சங்கம் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்தே ஓரளவு ஆதரவே கிடைக்கிறது.
எனவே ஐரோப்பிய நாடுகளின் தரத்தோடு போட்டியிடுகிற அளவுக்கு கட்டமைப்பு தேவை. அதற்கு நாம் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.
நான் குறை கூறுவதாக நினைக்க வேண்டாம். அதேநேரத்தில் இங்கிருக்கும் பிரச்னைகளை முடிந்த அளவுக்கு சரியான வழியில் தீர்க்க முயற்சிக்க வேண்டும்.
பெங்களூரில் உள்ள எனது டென்னிஸ் அகாதெமியில்கூட நான் இரு வெளிநாட்டு பயிற்சியாளர்களை நியமித்திருக்கிறேன். அவர்கள் இங்கு ஓர் ஆண்டு தங்கியிருந்து இளம் வீரர்களுக்கு பயிற்சியளிப்பார்கள்.
வெளிநாட்டில் சென்று பயிற்சி பெறுவது என முடிவு செய்தால், ஓர் ஆண்டு அங்கு தங்கியிருந்து பயிற்சி பெறுங்கள். ஒரு மாதம் அங்கு பயிற்சி பெறுவதன் மூலம் எந்த பலனும் கிடைக்காது என்றே அனைத்து வீரர்களிடமும் நான் கூறுகிறேன். அந்த அடிப்படையில்தான் நான் வெளிநாட்டு பயிற்சியாளர்களை நியமித்திருக்கிறேன். இந்த வாய்ப்பை இளம் வீரர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள் என நம்புகிறேன்” என்றார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.