உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கைக்கு ரஷ்ய டென்னிஸ் வீரர் ஆண்ட்ரி ரூப்லெவ் எதிர்ப்பு தெரிவித்தது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்ததுடன், பாராட்டுகளையும் குவித்துவருகிறது.
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை 3 நாட்களாக தொடர்கிறது. உக்ரைனின் 211 ராணுவத் தளங்கள், 17 39 ரேடார் யூனிட்டுகள், 67 டேங்கர்கள், 6 போர் விமானங்களை வீழ்த்தியுள்ளதாக ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் தலைநகர் விரைவில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் வரும் என ரஷ்ய படைகள் தெரிவிக்கின்றன.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கைக்கு உள்நாட்டு மக்களே எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ரஷ்ய அதிபர் விளாமிதிர் புடினுக்கு எதிராகவும் ரஷ்யாவின் போர் நடவடிக்கைக்கு எதிராகவும் ரஷ்ய மக்கள் போராட்டம் செய்கின்றனர். அப்படி போராடுபவர்களையும் கைது செய்கிறது ரஷ்ய அரசு.
ரஷ்யாவிலேயே போருக்கு எதிராக எதிர்ப்புகள் கிளம்பியது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. ரஷ்யாவில் பல்வேறு இடங்களில் ரஷ்ய அரசின் உக்ரைன் மீதான போர் நடவடிக்கைகளுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டுவருகின்றன.
இந்நிலையில், ரஷ்யாவின் பிரபல டென்னிஸ் வீரர் ஆண்ட்ரி ரூப்லெவ், துபாய் சாம்பியன்ஷிப் போட்டி முடிவில் கேமரா முன்பு, No War Please என எழுதினார். ஆண்ட்ரி ரூப்லெவின் இச்செயல் சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்ததுடன், அனைவரும் அவரை வெகுவாக பாராட்டிவருகின்றனர்.