
முதல் முறையாக கடந்த 2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரானது தென் ஆப்பிரிக்காவில் நடத்தப்பட்டது. இந்த தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதின. இதில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்தது. இதில், கவுதம் காம்பீர் 75 ரன்கள் எடுத்தார். ரோகித் சர்மா 30 ரன்கள் எடுத்துக் கொடுத்தார்.
பின்னர் விளையாடிய பாகிஸ்தான், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. கடைசி வரை விளையாடிய மிஸ்பா உல் ஹாக் 38 பந்துகளில் 4 சிக்ஸர் உள்பட 43 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் ஆட்டமிழக்க இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக டி20 உலகக் கோப்பை டிராபியை கைப்பற்றியது.
இந்த தொடரில் இடம் பெற்ற வீரர்கள் ஒவ்வொருவரும் 20 முதல் 25 வயது நிரம்பியவர்களாக இருந்தனர். மேலும், ஒரு சிலர் மட்டுமே அதிக வயது உடையவர்களாக டி20 உலகக் கோப்பையில் இடம் பெற்றிருந்தனர். அவர்களில் அஜித் அகர்கர் 29 வயது, ஹர்பஜன் சிங் 27 வயது, எம்.எஸ்.தோனி 26 வயது, கவுதம் காம்பீர் மற்றும் யுவராஜ் சிங் 25 வயது உடையவர்களாக டி20 உலகக் கோப்பையில் இடம் பெற்று விளையாடி டிராபியை வென்றனர்.
இதில், ரோகித் சர்மாவிற்கு வயது 20, பியூஷ் சாவ்லாவிற்கு வயது 18. இந்த இருவரும் மட்டுமே மிக குறைந்த வயதில் உலகக் கோப்பை தொடரில் விளையாடினர். இளம் வீரர்களை கொண்ட தோனி தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக உலகக் கோப்பை தொடரை வென்றது.
ஆனால், அதன் பிறகு நடைபெற்ற 7 டி20 உலகக் கோப்பை தொடரில் ஒன்றில் கூட இந்திய அணி டிராபியை வெல்லவில்லை. இந்த நிலையில் 9ஆவது டி20 உலகக் கோப்பை தொடர் வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. 9ஆவது டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.
பிசிசிஐ அறிவித்த 15 பேர் கொண்ட இந்திய அணி வீரர்கள்:
ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ்.
ரிசர்வ் வீரர்கள்: சுப்மன் கில், ரிங்க் சிங், கலீல் அகமது, ஆவேஷ் கான்.
இதில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட் தவிர மற்ற வீரர்கள் 30 வயதை கடந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக இந்த முறையும் இந்திய அணி டிராபியை கைப்பாற்றாது என்று பலரும் விமர்சிக்க தொடங்கியுள்ளனர். 2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடர் போன்று முற்றிலும் இளம் வீரர்கள் இடம் பெற்றால் தான் இந்திய அணி டிராபியை கைப்பற்றும் என்று எக்ஸ் பக்கங்களில் பலரும் விமர்சிக்க தொடங்கிவிட்டனர்.