#TokyoOlympics மகளிர் பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறினார் இந்தியாவின் பி.வி.சிந்து

By karthikeyan VFirst Published Jul 30, 2021, 3:10 PM IST
Highlights

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் பேட்மிண்டன் காலிறுதி போட்டியில் ஜப்பான் வீராங்கனை அகானே யாமகுச்சியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் இந்தியாவின் பி.வி.சிந்து
 

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்காக மிகச்சிறப்பாக ஆடிவரும் வீராங்கனைகளில் ஒருவர் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து. டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா தரப்பில் வீராங்கனைகள் தான் பதக்கங்களை வெல்வதுடன், பதக்கத்திற்கான நம்பிக்கையும் அளிக்கின்றனர்.

பளுதூக்குதலில் மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்ற நிலையில், பாக்ஸிங்கில் லவ்லினா வெண்கலத்தை உறுதி செய்துவிட்டார். அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகளில் வென்றால் தங்க பதக்கம் வெல்லலாம்.

பளுதூக்குதல், பாக்ஸிங்கை போல பேட்மிண்டனிலும் இந்தியாவிற்கு ஒரு பதக்கத்தை வென்றுவிடுவோம் என்ற நம்பிக்கையை இந்தியாவிற்கு அளிப்பது இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து.

மகளிர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில், இஸ்ரேல் வீராங்கனையை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு நகர்ந்த இந்தியாவின் பி.வி.சிந்து, அடுத்த போட்டியில் ஹாங்காங்கின் சியூங்கை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதிபெற்றார். 

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் டென்மார்க்கின் மியா ப்ளிட்ச்ஃபெல்ட்டை எதிர்கொண்ட பி.வி.சிந்து, மிகச்சிறப்பாக ஆடி முதல் செட்டை 21-15 மற்றும் 2வது செட்டை 21-13 என வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

இன்று நடந்த மகளிர் பேட்மிண்டன் காலிறுதி போட்டியில் ஜப்பானை சேர்ந்த அகானே யமகுச்சி என்ற வீராங்கனையை எதிர்கொண்ட பி.வி.சிந்து, இந்த போட்டியிலும் தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, எதிரணி வீராங்கனை மீது ஆதிக்கம் செலுத்தி ஆடினார். முதல் செட்டை 21-13 என எளிதாக வென்றார் பி.வி.சிந்து. ஆனால் 2வது செட்டில் அகானே, சிந்துவுக்கு டஃப் ஃபைட் கொடுத்தார். ஆனாலும் கடுமையாக போராடி இறுதியில் 22-20 என 2வது செட்டையும் வென்ற பி.வி.சிந்து காலிறுதியில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
 

click me!