ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய ஏ அணி, இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய லெவன் அணியை 125 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய ஏ அணி முத்தரப்பு ஒருநாள் தொடரில் ஆடுகிறது. இந்தியா “ஏ”, வெஸ்ட் இண்டீஸ் “ஏ” மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையே இந்த முத்தரப்பு தொடர் நடக்கிறது.
ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய இளம் படை இங்கிலாந்து சென்றுள்ளது. முத்தரப்பு போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாக, பயிற்சி போட்டிகள் நடந்துவருகின்றன. அதில் ஒரு போட்டியில் இந்திய ஏ அணி மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய லெவன் அணிகள் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து, முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. இந்திய ஏ அணியின் தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா மற்றும் மயன்க் அகர்வால் ஆகியோர் களமிறங்கினர். அகர்வால் 4 ரன்களில் வெளியேறினார். ஆனால் பிரித்வி ஷா நிதானமாக ஆடி அரைசதம் கடந்தார். 61 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து பிரித்வி அவுட்டானார்.
கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக ஆடி அரைசதம் கடந்து, 54 ரன்களில் வெளியேறினார். விகாரி 38 ரன்களும் விஜய் சங்கர் 11 ரன்களும் எடுத்து பெவிலியன் திரும்பினர். ஐபிஎல்லில் மிரட்டிய இளம் வீரர் இஷான் கிஷான், அரைசதம் அடித்து மிரட்டினார். அவரும் அரைசதம் அடிக்க, குருணல் பாண்டியா மற்றும் அக்ஸர் படேலும் தங்கள் பங்கிற்கு ரன்கள் சேர்த்தனர். 50 ஓவர்களின் முடிவில் இந்திய ஏ அணி 8 விக்கெட் இழப்பிற்கு 328 ரன்களை குவித்தது.
329 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய லெவன் அணியில், வெற்றியை நோக்கிய பயணத்துக்கு தேவையான பார்ட்னர்ஷிப்பே அமையவில்லை. சீரான இடைவெளியில் அந்த அணி விக்கெட்டுகளை இழந்து திணறியது. 36.5 ஓவர்களில் 203 ரன்களுக்கே அந்த அணி ஆல் அவுட்டானது. இதையடுத்து இந்திய ஏ அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணி சார்பில் தீபக் சாஹர் 3 விக்கெட்டுகளையும் அக்ஸர் படேல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். குருணல் பாண்டியா, விஜய் சங்கர், பிரசித் கிருஷ்ணா, கலீல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.