ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் வெற்றி பெற்று அந்த அணியை "வொயிட் வாஷ்" செய்தது இங்கிலாந்து அணி.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை 5–0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.
இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5–வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டர் நகரில் நேற்று நடைப்பெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங்க் செய்த ஆஸ்திரேலிய வீரர்கள் நிறைய ஓட்டங்கள் குவித்தே ஆகணும் என்று முனைப்பு காட்டியது. ஆனால், 34.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த ஆஸ்திரேலியா 205 ஓட்டங்களுக்கு மொத்த விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 56 ஓட்டங்கள் எடுத்தார்.
இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் மொயீன் அலி 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
இலக்கை நோக்கி களமிறங்கியது இங்கிலாந்து. 114 ஓட்டங்களுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
இந்தச் சூழலில் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர், அடில் ரஷித்துடன் இணைந்து படிப்படியாக அணியை சரிவில் இருந்து மீட்டெடுத்தார். இந்த ஜோடி 9–வது விக்கெட்டுக்கு 81 ஓட்டங்கள் திரட்டியது.
அடில் ரஷித் 20 ஓட்டங்களில் கேட்ச் ஆனார். இதன்பின்னர் கடைசி விக்கெட்டுக்கு வந்த ஜாக் பாலின் 1 ஓட்டம் துணையுடன் பட்லர் அணிக்கு வெற்றியை தேடித்தந்தார். இங்கிலாந்து அணி 48.3 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 208 ஓட்டங்கள் சேர்த்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆறாவது சதத்தை பூர்த்தி செய்த ஜோஸ் பட்லர் 110 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார்.
வெற்றியின்மூலம் இந்தத் தொடரை 5–0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முழுமையாக வசப்படுத்தி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இங்கிலாந்து அணி எல்லா ஆட்டங்களிலும் வெற்றி கண்டு எதிரணியை "வொயிட் வாஷ்" செய்தது.