தான் ஒரு ஓரினச் சேர்க்கையாளர்’ என்று தடகள வீராங்கனை டுட்டீ சந்த் பகிரங்கமாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
இந்தியாவின் அதிவேக ஓட்டப்பந்தய வீராங்கனை டுட்டீ சந்த். 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 11.24 வினாடிகளில் இலக்கை கடந்து தேசிய அளவில் சாதனை புரிந்துள்ளார். கடந்த ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டில் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டம் இரண்டிலும் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார்.
ஒடிசாவைச் சேர்ந்த 23 வயதான டுட்டீ சந்த், சில ஆண்டுகளுக்கு முன்பு பாலின பிரச்சினையில் சிக்கினார். அதாவது அவரிடம் ஆண் தன்மைக்குரிய ஹார்மோன் அதிகம் இருப்பதாக கூறி தடகளத்தில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. அதன் பிறகு விளையாட்டுக்கான கோர்ட்டில் அப்பீல் செய்து சாதகமான தீர்ப்பை பெற்றார்.
இந்த நிலையில் அவர், தான் ஒரு ஓரினசேர்க்கையாளர் என்ற தகவலை வெளியிட்டு இப்போது புதிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். ‘ஒரே பாலினத்தை விரும்புகிறவர்கள்’ என்று ஒரு சில விளையாட்டு பிரபலங்களே தைரியமாக வெளிஉலகுக்கு சொல்லி இருக்கிறார்கள். அந்த பட்டியலில் டுட்டீ சந்தும் இணைந்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டுட்டீ சந்த் , கடந்த 5 ஆண்டுகளாக எனது கிராமத்தை சேர்ந்த 19 வயது பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறேன். அந்த பெண் புவனேசுவரத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
அவர் எனக்கு சொந்தக்காரர் தான். அவரது வீட்டிற்கு செல்லும் போதெல்லாம் நிறைய நேரத்தை செலவிடுவேன். அவர் தான் எனது உயிர் மூச்சு. எதிர்காலத்தில் அவருடன் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ விரும்புகிறேன் என அவர் ஓபனாக தெரிவித்தார்.
.
என்னை பொறுத்தவரை இறுதியாக அவருடன் இருக்கவே விரும்புகிறேன். தற்போது ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதே எனது லட்சியம். அதற்காக கடின பயிற்சி மேற்கொண்டுள்ளேன். இவ்வாறு டுட்டீ சந்த் கூறினார்.
தனது பார்ட்னரின் ஒப்புதலுடன் இந்த விஷயத்தை வெளிப்படுத்திய டுட்டீ சந்த் அவரது பெயரை வெளியிட மறுத்து விட்டார்.