கடைசி ஓவரில் பெங்களூரு அணியின் வெற்றிக்கு 12 ரன்கள் தேவை என்ற பரபரப்பான சூழலில், அந்த ஓவரை அருமையாக வீசி ஹைதராபாத் அணியை வெற்றியடைய செய்தார் புவனேஷ்வர் குமார்.
வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் ஹைதராபாத் அணியுடன் பெங்களூரு அணி நேற்று மோதியது. டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் கோலி, முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார்.
ஹைதராபாத் அணியில் ஷிகர் தவான், அலெக்ஸ் ஹேல்ஸ், மனீஷ் பாண்டே ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். அந்த அணி கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் ஷாகிப் அல் ஹாசன் ஜோடி சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தது.
வில்லியம்சன் 56 ரன்களும் ஷாகிப் அல் ஹாசன் 36 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். இதையடுத்து களமிறங்கிய அனைவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேற, 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஹைதராபாத் அணி 146 ரன்கள் எடுத்தது.
147 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. கோலி மட்டும் 39 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சோபிக்கவில்லை. கடைசி வரை போராடிய கோலின் டி கிராண்ட்ஹோம் 33 ரன்கள் எடுத்தார். ஆனால் அவரால் இலக்கை எட்டமுடியவில்லை.
17 ஓவருக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்கள் எடுத்திருந்தது பெங்களூரு அணி. கடைசி மூன்று ஓவர்களுக்கு 25 ரன்கள் தேவைப்பட்டது. இந்த இக்கட்டான நிலையில், 18வது ஓவரை புவனேஷ்வர் குமார் வீசினார். இந்த ஓவரை அருமையாக வீசிய புவனேஷ்வர் குமார் வெறும் 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
இதையடுத்து கடைசி இரண்டு ஓவர்களில் 19 ரன்கள் தேவை என்ற நிலையில், 19வது ஓவரை சித்தார்த் கௌல் வீசினார். கௌலும் சிறப்பாக வீசினார். 19வது ஓவரில் வெறும் 7 ரன்களை மட்டுமே கொடுத்தார் கௌல்.
கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவை. டி கிராண்ட்ஹோம் மற்றும் மந்தீப் சிங் ஆகிய இருவரும் களத்தில் இருந்தனர். கடைசி ஓவரில் 12 ரன்கள் என்பது எட்டக்கூடிய ஒன்றுதான். நெருக்கடியான நிலையில், கடைசி ஓவரை புவனேஷ்வர் குமார் வீசினார். டெத் ஓவர்களை வீசுவதில் வல்லவரான புவனேஷ்வர் குமார், வழக்கம்போலவே அசத்தலாக வீசினார். கடைசி ஓவரில் வெறும் 6 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்ததோடு, கடைசி பந்தில் கிராண்ட் ஹோம் விக்கெட்டையும் கைப்பற்றி, ஹைதராபாத் அணியை வெற்றியடைய செய்தார்.
கடைசி மூன்று ஓவர்களில் 25 ரன்கள் என்ற எளிய இலக்கை கூட பெங்களூரு அணியை எட்டவிடாமல் புவனேஷ்வர் குமார் தடுத்துவிட்டார். ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு புவனேஷ்வர் குமாரின் அபாரமான பந்துவீச்சு மிக முக்கிய காரணம். 16வது ஓவரில் டிகிராண்ட்ஹோம், இரண்டு சிக்ஸர்கள் விளாசினார். அப்போது, வெற்றி பெற்றுவிடலாம் என்ற நினைப்பு பெங்களூரு அணி வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் எழுந்திருக்கலாம். ஆனால் கடைசி மூன்று ஓவரில் ஆட்டத்தையே புரட்டி போட்டார் புவனேஷ்வர் குமார்.
இந்த போட்டியில் தோற்றதன்மூலம், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை பெங்களூரு அணி இழந்துவிட்டது. பெங்களூரு அணியின் பிளே ஆஃப் கனவை கடைசி மூன்று ஓவர்களில் புவனேஷ்வர் குமார் தகர்த்துவிட்டார்.