2 பேரு இருக்காங்க.. களத்துல யாரு இறங்குறானு பொறுத்திருந்து பார்ப்போம் - யுவராஜ் சிங்

By karthikeyan VFirst Published May 4, 2019, 5:39 PM IST
Highlights

உலக கோப்பையில் நான்காவது பேட்டிங் வரிசையில் யாரை இறக்குவது என்பது குறித்து யுவராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார். 

உலக கோப்பை மே மாதம் 30ம் தேதி தொடங்குகிறது. உலக கோப்பைக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டு விட்டன. 

நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு அடுத்தபடியாகவே இந்திய அணி அறிவிக்கப்பட்டு விட்டது. இந்திய அணியின் 4ம் வரிசை வீரராக பார்க்கப்பட்ட ராயுடு, அண்மைக்காலமாக சொதப்பியதால் அவரை நீக்கிவிட்டு உலக கோப்பை அணியில் விஜய் சங்கர் சேர்க்கப்பட்டார். 

நடப்பு ஃபார்மின் அடிப்படையிலும் விஜய் சங்கர் ஒரு ஆல்ரவுண்டர் என்பதால், தேவைப்படும்போது பவுலிங்கும் வீசுவார் என்பதாலும் அவரை அணியில் எடுத்ததாக தேர்வுக்குழு தலைவர் பிரசாத் விளக்கமளித்திருந்தார். இந்திய அணியில் நான்காம் வரிசை சிக்கல் நீண்டகாலமாக இருந்துவருகிறது. யுவராஜ் சிங்கிற்கு அடுத்த அந்த இடத்தை பூர்த்தி செய்வதற்காக பல வீரர்கள் பரிசோதிக்கப்பட்டனர்.

பல சோதனை முயற்சிகளுக்கு பிறகு ராயுடு உறுதி செய்யப்பட்டதாக கருதப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் நடந்த ஆஸ்திரேலியா, நியூசிலாந்து தொடர்களில் அருமையாக ஆடி உலக கோப்பை அணியில் இடம்பிடித்துவிட்டார் விஜய் சங்கர். 

விஜய் சங்கர் மிடில் ஓவர்களில் நிதானமாக பார்ட்னர்ஷிப் அமைத்து சிங்கிள் ரோடேட் செய்வதுடன் அவ்வப்போது பெரிய ஷாட்டுகளை அடித்தும் ஆடுகிறார். எனவே விஜய் சங்கர் நான்காம் வரிசையில் இறங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்லாமல் கேஎல் ராகுலும் அணியில் இருப்பதால் அவரை இறக்குவதற்கான வாய்ப்பும் உள்ளது. மேலும் நான்காம் வரிசையை இந்த வீரருக்கு என்று உறுதி செய்யாமல், சூழலுக்கு ஏற்றவாறு வீரர்களை களமிறக்குவதற்கான திட்டமும் உள்ளது. 

ஆனால் உலக கோப்பையில் விஜய் சங்கர் அல்லது கேஎல் ராகுல் ஆகிய இருவரில் ஒருவர் நான்காம் வரிசையில் இறக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளது. இந்நிலையில், யுவராஜ் சிங்கிடம் நான்காம் வரிசை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், 4ம் இடத்தில் யாரை இறக்க வேண்டும், யார் சரியானவர் என்பதெல்லாம் அணி தேர்வாளர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி. ஒட்டுமொத்த தொடரையும் மனதில் கொண்டு அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. 4ம் வரிசை மிகவும் முக்கியமான பேட்டிங் வரிசை. அதனால் யார் பொருத்தமானவர் என்பதை ஆராய்ந்து இறக்க வேண்டும். 2 வீரர்கள் உள்ளனர். அவர்களில் யார் 4ம் வரிசையில் இறக்கப்படுகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்று யுவராஜ் சிங் தெரிவித்தார். 
 

click me!