உலக கோப்பையை எந்த அணி வெல்லும்..? யுவராஜ் சிங்கின் தேர்வு

By karthikeyan VFirst Published May 4, 2019, 5:13 PM IST
Highlights

உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள மூன்று அணிகள் எவை என்று யுவராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார். 

உலக கோப்பை மே மாதம் 30ம் தேதி தொடங்குகிறது. உலக கோப்பையில் ஆடும் அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டு விட்டன.

இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய 2 அணிகளில் ஒன்றுதான் இந்த உலக கோப்பையை வெல்லும் என்று பல முன்னாள் வீரர்கள் ஆருடம் தெரிவித்துள்ளனர். 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக ஆடிவருகிறது. இந்திய அணியில் முன்னெப்போதையும் விட ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் வலுவாக உள்ளது. பும்ரா, புவனேஷ்வர் குமார், ஷமி ஆகியோர் எதிரணிகளை தெறிக்கவிடுகின்றனர். குல்தீப் - சாஹல் ஜோடி ஸ்பின்னில் மிரட்டுகிறது. இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங்கும் வலுவாக உள்ளது. 

அதேபோல இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி கடந்த சில ஆண்டுகளாக ஒருநாள் போட்டிகளில் ஆக்ரோஷமாக ஆடிவருகிறது. அந்த அணி சிறப்பாக இருப்பதுடன் உலக கோப்பை இங்கிலாந்தில் நடப்பது, அந்த அணிக்கு கூடுதல் பலம். அதனால் உலக கோப்பையை இங்கிலாந்து வெல்வதற்கான வாய்ப்புகள் தான் பிரகாசமாக இருப்பதாக பல முன்னாள் ஜாம்பவான்கள் பார்க்கின்றனர். 

ஸ்மித் மற்றும் வார்னர் அணிக்கு திரும்பியிருப்பதால் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணியும் கோப்பையை மீண்டும் வெல்லும் முனைப்பில் உள்ளது. அந்த அணி பேட்டிங், பவுலிங் என சமபலம் வாய்ந்த அணியாக உள்ளது. பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளும் சிறந்த அணிகள் தான். 

இவ்வாறு ஒவ்வொரு அணியுமே சிறந்த அணியாக திகழும் நிலையில், பல முன்னாள் வீரர்களும் தங்களது கணிப்பை தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் உலக கோப்பை குறித்து பேசிய யுவராஜ் சிங், இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரண்டு அணிகள் தான் என்னுடைய முதன்மையான தேர்வு. வார்னரும் ஸ்மித்தும் அணிக்கு திரும்பிவிட்டதால் ஆஸ்திரேலிய அணியும் கடும் சவாலாக திகழும். வெஸ்ட் இண்டீஸ் அணியும் வலுவாக உள்ளது. அதனால் இந்த சூழலில் கூறுவது கடினம். எனினும் இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரண்டு அணிகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணிதான் என்னுடைய மூன்றாவது தேர்வு என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். 
 

click me!