ஐபிஎல் 14வது சீசனில் ஆடும்போது, தனக்கு கொரோனா பரவியது எப்படி என்று ரிதிமான் சஹா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 14வது சீசன் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. லீக் சுற்றில் 29 போட்டிகள் நடந்த நிலையில், வருண் சக்கரவர்த்தி, ரிதிமான் சஹா உள்ளிட்ட சில வீரர்களுக்கு கொரோனா உறுதியானதால் சீசன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
ஐபிஎல்லில் பயோ பபுள் மிக கண்டிப்புடன் பின்பற்றப்பட்டும், வீரர்களுக்கு கொரோனா உறுதியானது அனைவருக்குமே அதிர்ச்சியாகத்தான் இருந்தது. பயோ பபுள் மீறல்கள் எதுவும் நடந்ததா என்ற சந்தேகமும் எழுந்தது.
இந்நிலையில், ஐபிஎல்லுக்கு இடையே கொரோனாவால் பாதிக்கப்பட்ட வீரர்களில் ஒருவரான சன்ரைசர்ஸ் வீரர் ரிதிமான் சஹா, தனக்கு கொரோனா எப்படி பரவியிருக்கலாம் என்று தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து பேசியுள்ள ரிதிமான் சஹா, நாங்கள் ஏர்போர்ட்டிற்கு சென்றோம். டெல்லிக்கு சென்று, அங்கு சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் ஆடினோம். ஏர்போர்ட்டில் எனக்கு கொரோனா தொற்றியிருந்தால், சிஎஸ்கே போட்டிக்கு முன்பாக கொரோனா பாசிட்டிவ் என்று வந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி வரவில்லை. சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியின்போது சிஎஸ்கே அணியினர் சிலருடன் பழகினேன். எனவே அவர்களிடமிருந்து தான் எனக்கு கொரோனா பரவியிருக்க வேண்டும். அவர்களில் சிலருக்கு அறிகுறிகள் இருந்திருக்கின்றன. எனவே அப்படித்தான் எனக்கு பரவியிருக்க வேண்டும்.
கடந்த சீசனில் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆடும்போது, அந்நியர்கள் யாருடனும் தொடர்பே ஏற்படவில்லை. இந்த சீசனிலும் யாரும் பயோ பபுள் விதிகளை எல்லாம் மீறவில்லை. ஆனால் மைதான ஊழியர்கள், டிரைவர் அல்லது சிஎஸ்கே வீரர்கள் இவர்களில் யாரிடமிருந்தாவது பரவியிருக்கலாம் என்று சஹா தெரிவித்துள்ளார்.