
இந்திய அணியின் முன்னாள் அதிரடி தொடக்க வீரர் வீரேந்திர சேவாக். சர்வதேச கிரிக்கெட்டில் ஆல்டைம் சிறந்த அதிரடி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் சேவாக்கும் ஒருவர். 1999ம் ஆண்டிலிருந்து 2013ம் ஆண்டுவரை இந்திய அணிக்காக ஆடிய சேவாக், 104 டெஸ்ட், 251 ஒருநாள் போட்டிகளில் ஆடி முறையே 8586 மற்றும் 8273 ரன்களை குவித்துள்ளார் சேவாக்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 முச்சதம் அடித்த ஒரே இந்திய வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான சேவாக், ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமும் அடித்துள்ளார்.
எல்லா பெரிய பேட்ஸ்மேன்களுக்கும் நடப்பதை போலவே, ஃபார்மில் இல்லாத கடினமான காலத்தை வீரேந்திர சேவாக்கும் எதிர்கொண்டார். அவர் ஃபார்மில் இல்லாமல் ஸ்கோர் செய்யமுடியாமல் திணறிய காலக்கட்டத்தில் தோனி ஓரங்கட்டியதாகவும், அந்த சமயத்தில் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுவிட வேண்டும் என்று எண்ணியதாகவும் சேவாக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய வீரேந்திர சேவாக், 2008 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின்போது ஓய்வு சிந்தனை எனக்கு வந்தது. டெஸ்ட்கிரிக்கெட்டில் நன்றாக ஆடி 150 ரன்களை அடித்த நான், ஒருநாள் கிரிக்கெட்டில் ஸ்கோர் செய்ய முடியாமல் திணறினேன். 3-4 போட்டிகளில் நான் ஸ்கோர் செய்யாததால் என்னை அணியிலிருந்து ஓரங்கட்டினார் தோனி. அதனால் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுவிடுவோம்; டெஸ்ட்டில் மட்டும் ஆடுவோம் என்ற எண்ணம் எனக்கு வந்தது. ஆனால் சச்சின் டெண்டுல்கர் தான், என்னை அமைதியாக இருக்குமாறும், வீட்டிற்கு போய் பொறுமையாக யோசித்து முடிவெடுக்குமாறும் அறிவுறுத்தினார். நல்லவேளை நான் ஓய்வு அறிவிக்கவில்லை என்று சேவாக் கூறினார்.
அதன்பின்னர் 2011ம் ஆண்டில் ஒருநாள் உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் சேவாக் முக்கிய அங்கம் வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.