#ICCWTC ஃபைனல்: வந்ததும் சென்ற விராட் கோலி.. அதிர்ஷ்டத்தால் தப்பிய ரிஷப் பண்ட்..!

By karthikeyan VFirst Published Jun 20, 2021, 4:14 PM IST
Highlights

3ம் நாள் ஆட்டத்தின் தொடக்கத்தில் களத்திற்கு வந்ததுமே, இன்றைய நாள் ஆட்டத்தில் ரன்னே அடிக்காமல் ஆட்டமிழந்து நடையை கட்டினார் விராட் கோலி.
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி கடந்த 18ம் தேதி தொடங்கியிருக்க வேண்டியது. ஆனால் மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் முழுவதுமே மழையால் பாதிக்கப்பட்டது. 2ம் நாளான நேற்று ஆட்டம் தொடங்கியது.

நேற்றைய ஆட்டமும் முழுவதுமாக நடக்கவில்லை. 64.4 ஓவர்கள் மட்டுமே நேற்று வீசப்பட்டது. போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் 3 முறை தடைபட்டதால், 25 ஓவர்கள் வீசமுடியாமல் போனது. ஆனால் இந்த இடையூறுகளுக்கு மத்தியிலும் இந்திய வீரர்கள் நன்றாக பேட்டிங் ஆடினார்கள்.

தொடக்க வீரர்கள் ரோஹித்தும் கில்லும் இணைந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 62 ரன்களை சேர்த்தனர். ரோஹித் 34 ரன்களிலும், கில் 28 ரன்களிலும், புஜாரா 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 88 ரன்களுக்கு இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில், அதன்பின்னர் கோலியும் ரஹானேவும் இணைந்து சிறப்பாக ஆடினர். 

ஆட்டம் தொடங்கிய நேற்றைய 2ம் நாளான ஆட்டத்தில் 64.4 ஓவரில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் அடித்திருந்தது. 3ம் நாளான ஆட்டம் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி நடந்துவருகிறது. இன்றும் 3 மணிக்கு தொடங்கியிருக்க வேண்டிய போட்டி அரைமணி நேரம் தாமதமாகத்தான் தொடங்கியது.

நேற்று நன்றாக செட்டில் ஆகி சிறப்பாக ஆடினார் கோலி. ஆனால் இன்றைய ஆட்டத்தில் ஒரு ரன் கூட அடிக்காமல், களத்திற்கு வந்த ஒருசில ஓவர்களிலேயே கைல் ஜாமிசனின் பந்தில் 44 ரன்களுக்கு எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார்.

இதையடுத்து ரஹானேவுடன் ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட், கைல் ஜாமிசனின் பந்தில் அம்பயர்ஸ் கால் என்ற விதியின் மூலம் தப்பித்தார். ரிஷப் பண்ட் ரன்னே அடிக்காத நிலையில், கைல் ஜாமிசன் வீசிய பந்து அவரது கால்காப்பை தாக்கியது. அதற்கு அம்பயர் அவுட் கொடுக்காததையடுத்து, மிகவும் க்ளோசான அந்த எல்பிடபிள்யூவிற்கு டி.ஆர்.எஸ் எடுத்தார் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன். பந்தின் பாதி பகுதி லெக் ஸ்டம்ப்பை தாக்கியதால், அம்பயர்ஸ் கால் என்று தேர்டு அம்பயர் தெரிவித்தார். களநடுவர் நாட் அவுட் கொடுத்திருந்ததால் தப்பினார் ரிஷப். ஒருவேளை களநடுவர் அவுட் கொடுத்திருந்தால், ரிஷப் பண்ட் அவுட். அதிர்ஷ்டத்தால் தப்பிய ரிஷப் பண்ட் , ரஹானேவுடன் சேர்ந்து ஆடிக்கொண்டிருக்கிறார்.
 

click me!