#ICCWTC இந்த கண்டிஷனில் முதல் இன்னிங்ஸில் இதுவே போதுமான ஸ்கோர் தான்..! இந்திய அணியின் பேட்டிங் கோச் ஓபன் டாக்

By karthikeyan VFirst Published Jun 20, 2021, 3:46 PM IST
Highlights

சவுத்தாம்ப்டன் கண்டிஷனில் முதல் இன்னிங்ஸில் எது போதுமான ஸ்கோராக இருக்கும் என்று இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கருத்து தெரிவித்துள்ளார்.
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி கடந்த 18ம் தேதி தொடங்கியிருக்க வேண்டியது. ஆனால் மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் முழுவதுமே மழையால் பாதிக்கப்பட்டது. 2ம் நாளான நேற்று ஆட்டம் தொடங்கியது.

நேற்றைய ஆட்டமும் முழுவதுமாக நடக்கவில்லை. 64.4 ஓவர்கள் மட்டுமே நேற்று வீசப்பட்டது. போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் 3 முறை தடைபட்டதால், 25 ஓவர்கள் வீசமுடியாமல் போனது. ஆனால் இந்த இடையூறுகளுக்கு மத்தியிலும் இந்திய வீரர்கள் நன்றாக பேட்டிங் ஆடினார்கள்.

தொடக்க வீரர்கள் ரோஹித்தும் கில்லும் இணைந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 62 ரன்களை சேர்த்தனர். ரோஹித் 34 ரன்களிலும், கில் 28 ரன்களிலும், புஜாரா 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 88 ரன்களுக்கு இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில், அதன்பின்னர் கோலியும் ரஹானேவும் இணைந்து சிறப்பாக ஆடினர். 

ஆட்டம் தொடங்கிய நேற்றைய 2ம் நாளான ஆட்டத்தில் 64.4 ஓவரில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் அடித்திருந்தது. 3ம் நாளான ஆட்டம் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி நடந்துவருகிறது. இன்றும் 3 மணிக்கு தொடங்கியிருக்க வேண்டிய போட்டி அரைமணி நேரம் தாமதமாகத்தான் தொடங்கியது.

இங்கிலாந்தின் வானிலையை எதிர்கொண்டு ஆடுவதுதான் பெரிய சவால். அந்தவகையில், அதை இந்திய வீரர்கள் சிறப்பாகவே செய்துவருகின்றனர். இந்நிலையில், முதல் இன்னிங்ஸில் 250 ரன்களுக்கு மேல் அடித்தாலே, இந்த கண்டிஷனுக்கு அது போதுமான ஸ்கோராக இருக்கும் என்று இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

கோலியும் ரஹானேவும் சிறப்பாக ஆடிவருகின்றனர். இன்னும் ரிஷப் பண்ட், ஜடேஜா ஆகிய வேகமாக ஸ்கோர் செய்யும் வீரர்களும், நன்றாக பேட்டிங் ஆடும் அஷ்வின், ஓரளவிற்கு சிறப்பாக ஆடக்கூடிய இஷாந்த் சர்மா ஆகியோரும் இருப்பதால், இந்திய அணி 300 ரன்களுக்கு மேல் அடிக்க வாய்ப்புள்ளது.

click me!