
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபியிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று நாக்பூரில் தொடங்கியது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் ஆடியது. அதன்படி அந்த அணியில் லபுசேஞ்ச் அதிகபட்சமாக 49 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற ஆஸ்திரேலியா 177 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விக்கெட் கீப்பர் கேஎஸ் பரத் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகினர். தனது முதல் இன்னிங்கிசை தொடங்கிய இந்திய அணியில் கேஎல் ராகுல் 20 ரன்களில் வெளியேறினார். ஆஸ்திரேலியாவின் அறிமுக வீரர் முஃபி இந்த விக்கெட்டை கைப்பற்றினார். தொடர்ந்து தான் மோசமான ஃபார்மில் இருப்பதை கேஎல் ராகுல் வெளிக்காட்டி வருகிறார். இதற்கு முன்னதாக வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் 22, 23, 10, 2 ரன்கள் என்று எடுத்திருந்தார். இவரைத் தொடர்ந்து வந்த அஸ்வின் 23 ரன்கள் எடுத்திருந்த நிலையில், முர்ஃபி பந்தில் ஆட்டமிழந்தார்.
புஜாராவும் நீண்ட நேரம் நிற்காமல் 7 ரன்களில் முர்ஃபி பந்தில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்த விராட் கோலி 2 பவுண்டரி அடித்து அதிரடி காட்ட தொடங்கினார். ஆனால், உணவு இடைவேளை முடிந்து வந்த முதல் பந்திலேயே முர்ஃபி பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 12 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதன் பிறகு தனது 32 ஆவது வயது 4 மாதம், 26ஆவது நாளில் இந்தப் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான சூர்யகுமார் யாதவ் இந்தப் போட்டியில் பவுண்டரி அடித்து தனது ரன் கணக்கை தொடங்கினார். ஆனால், அவர் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. சூர்யகுமார் யாதவ் 5 ரன்களில் லையன் பந்தில் ஆட்டமிழந்தார்.
இவரைத் தொடர்ந்து வந்த ரவீந்திர ஜடேஜா தற்போது விளையாடி வருகிறார். ஆஸ்திரேலியா சார்பில் இந்தப் போட்டியில் அறிமுகமான ரோட் முர்ஃபி 24 ஓவர்கள் வீசி 4 மெய்டன் உள்பட 59 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.