மகளிர் ஆசிய கோப்பை அரையிறுதியில் பாகிஸ்தானை கடைசி பந்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற இலங்கை அணி ஃபைனலுக்கு முன்னேறியுள்ளது.
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் நடந்துவரும் நிலையில், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, தாய்லாந்து, இலங்கை, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
இந்தியா - தாய்லாந்து இடையே நடந்த அரையிறுதி போட்டியில் தாய்லாந்து அணியை 74 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்று ஃபைனலுக்கு முன்னேறியது.
இதையும் படிங்க - டி20 உலக கோப்பை போட்டிகள் தியேட்டரில் நேரலையாக ஒளிபரப்பு..!
அதைத்தொடர்ந்து சில்ஹெட்டில் இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான அரையிறுதி போட்டி நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி 20 ஓவரில் வெறும் 122 ரன்கள் மட்டுமே அடித்தது.
இலங்கை அணியின் தொடக்க வீராங்கனை அனுஷ்கா சஞ்சீவனி 21 பந்தில் 26 ரன்களும், 3ம் வரிசையில் ஆடிய மாதவி 35 ரன்களும் அடித்தனர். மற்ற வீராங்கனைகள் சரியாக ஆடவில்லை. ஆனால் அவர்களின் சிறிய பங்களிப்பால் 20 ஓவரில் 122 ரன்கள் மட்டுமே அடித்தது.
123 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணியில் கேப்டன் பிஸ்மா மரூஃப் 41 பந்தில் 42 ரன்கள் அடித்தார். பொறுப்புடன் ஆடினார் பிஸ்மா. நிதா தர் 26 ரன்கள் அடித்தார். 19 ஓவரில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் அடித்திருந்தது. கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை வீசிய குலசூரியா முதல் 5 பந்தில் 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த பந்தில் ஒரு ரன் மட்டுமே கிடைக்க, இலங்கை அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று, ஃபைனலுக்கு முன்னேறியுள்ளது.
இதையும் படிங்க - டி20 உலக கோப்பை அரையிறுதியில் இந்த 4 அணிகள் தான் மோதும்..! ரவி சாஸ்திரி அதிரடி
வரும் 15ம் தேதி சனிக்கிழமை நடக்கும் ஃபைனலில் இந்தியாவும் இலங்கையும் மோதுகின்றன.