
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசன் தற்போது தொடக்க விழா நிகழ்ச்சியோடு பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது. இதில் பாலிவுட் பிரபலங்களான ஷாருக்கான், வருண் தவான், ஷாகீத் கபூர், சித்தார்த் மல்கோத்ரா, டைகர் ஷெராஃப், கார்த்திக் ஆர்யன் ஆகியோர் நடன நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
கார்த்திக் ஆர்யன் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியையும், சித்தார்த் மல்கோத்ரா டெல்லி கேபிடல்ஸ் அணிக்காகவும், டைகர் ஷெராஃப் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியையும், வருண் தவான் யுபி வாரியர்ஸ் அணியையும், ஷாகித் கபூர் மும்பை இந்தியன்ஸ் அணியையும் அறிமுகம் செய்தனர். ஷாருக்கான் நடனம் ஆடி இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
இதையடுத்து இன்று நடக்கும் முதல் போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், மெக் லேனிங் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த தொடரில் டெல்லி கேபிடல்ஸ், குஜராத் ஜெயிண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் யுபி வாரியர்ஸ் என்று 5 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன.
இந்த தொடரில் மொத்தமாக 22 போட்டிகள் நடத்தப்படுகிறது. மேலும், எல்லா போட்டிகளும் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இறுதிப் போட்டியானது மார்ச் 17 ஆம் தேதி டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடக்க இருக்கிறது. முதல் சீசன் ஹோம் பார்மேட்டில் நடந்தது. ஆனால், இந்த சீசனுக்கான எல்லா போட்டிகளும் டெல்லி மற்றும் பெங்களூரு மைதானங்களில் நடத்தப்படுகிறது.
இந்த 5 அணிகளில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். இதில், 2ஆவது மற்றும் 3ஆவது இடங்களில் உள்ள அணிகள் எலிமினேட்டரில் மோதும். மேலும் முதல் இடத்தில் இருக்கும் அணியானது நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.