ரோஹித் சர்மா - ஷுப்மன் கில் இருவருமே அபார சதங்கள்..! ஜெயசூரியா, பாண்டிங்கின் சாதனையை சமன் செய்தார் ரோஹித்

By karthikeyan VFirst Published Jan 24, 2023, 3:35 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் ஆகிய இருவருமே அபாரமாக ஆடி சதமடிக்க, இந்திய அணி மெகா ஸ்கோரை நோக்கி ஆடிவருகிறது. இந்த சதத்தின் மூலம் ஜெயசூரியா மற்றும் பாண்டிங்கின் ஒருநாள் கிரிக்கெட் சாதனையை சமன் செய்துள்ளார் ரோஹித் சர்மா. 
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணி 2-0 என ஒருநாள் தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி ஒருநாள் போட்டி இன்று இந்தூரில் நடந்துவருகிறது. 

இந்திய நேரப்படி  பிற்பகல் 1 மணிக்கு டாஸ் போடப்பட்டு 1.30க்கு போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டன. முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் நீக்கப்பட்டு யுஸ்வேந்திர சாஹல் மற்றும் உம்ரான் மாலிக் ஆகிய இருவரும் அணியில் சேர்க்கப்பட்டனர்.

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், உம்ரான் மாலிக்.  

வெவ்வேறு ஃபார்மட்டுக்கு வெவ்வேறு கேப்டன்கள்..! மௌனம் கலைத்த ராகுல் டிராவிட்

நியூசிலாந்து அணி:

ஃபின் ஆலன், டெவான் கான்வே, ஹென்ரி நிகோல்ஸ், டேரைல் மிட்செல், டாம் லேதம் (கேப்டன், விக்கெட் கீப்பர்), க்ளென் ஃபிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சாண்ட்னெர், ஜேகப் டஃபி, லாக்கி ஃபெர்குசன், பிளைர் டிக்னெர்.

முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் ஆகிய இருவரும் தொடக்கம் முதலே அடித்து ஆடி ஸ்கோர் செய்தனர். இருவருமே பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து ஆட, இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் நியூசிலாந்து அணி திணறியது. அடித்து ஆடிய ரோஹித் சர்மா 83 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் சதமடித்தார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் 3 ஆண்டுகளாக சதமடிக்காமல் இருந்துவந்த ரோஹித் சர்மா, 1100 நாட்களுக்கு பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் சதமடித்தார். இது ஒருநாள் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவின் 30வது சதமாகும். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக ரோஹித் சர்மாவின் 28வது சதம் இது. இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 2வது இடத்தை சனத் ஜெயசூரியாவின் பகிர்ந்துள்ளார். ஜெயசூரியாவும் தொடக்க வீரராக 28 சதங்கள் அடித்துள்ளார். இன்னுமொரு சதமடித்தால் ஜெயசூரியாவை ரோஹித் முந்திவிடுவார். இந்த பட்டியலில் 45 சதங்களுடன் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார்.

மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 30 சதங்களுடன், ரிக்கி பாண்டிங்கின் சாதனையை சமன் செய்து 3ம் இடத்தை பாண்டிங்குடன் பகிர்ந்துள்ளார். ரோஹித்துக்கு மேலாக, சச்சின் டெண்டுல்கர் (49) மற்றும் விராட் கோலி (46) ஆகிய இருவர் மட்டுமே உள்ளனர். அவர்கள் இருவரது சாதனையையும் ரோஹித் முறியடிப்பது கடினம். 

பெரிய தவறு செய்தும் ஐசிசி தண்டனையிலிருந்து இஷான் கிஷன் தப்பியது எப்படி..?

ரோஹித் சர்மாவை தொடர்ந்து ஷுப்மன் கில்லும் சதமடித்தார். 74 பந்தில் 13 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் கில் சதமடித்தார். இந்த தொடரின் முதல் போட்டியில் இரட்டை சதமடித்த கில், இந்த போட்டியிலும் சதமடித்து மீண்டும் இரட்டை சதத்தை நோக்கி ஆடிவருகிறார். ரோஹித் - கில் ஆகிய இருவருமே சதமடித்து முதல் விக்கெட்டுக்கு 26.1 ஓவரில் 212 ரன்களை குவித்தனர். ரோஹித் சர்மா 101 ரன்களுக்கும், கில் 112 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
 

click me!