
ஐபிஎல் 15வது சீசனில் புதிதாக களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸும், ராஜஸ்தான் ராயல்ஸும் ஃபைனலுக்கு முன்னேறியுள்ளன. மே 29ம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ஃபைனல் நடக்கிறது.
ஹர்திக் பாண்டியா தலைமையில் புதிதாக களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி அபாரமாக விளையாடி ஃபைனலுக்கு முதல் அணியாக முன்னேறியது. குஜராத் டைட்டன்ஸ் அணியில் ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு வீரர் போட்டியை ஜெயித்து கொடுத்தார்.
ஹர்திக் பாண்டியா, ரிதிமான் சஹா, ஷுப்மன் கில், டேவிட் மில்லர், ரஷீத் கான், ராகுல் டெவாட்டியா என ஒவ்வொரு வீரரும் அந்த அணிக்காக போட்டியை ஜெயித்துகொடுத்தனர். ஒன்றிரண்டு வீரர்களை மட்டுமே நம்பியிருக்காததுதான் அந்த அணியின் பலமே.
நாளை(மே29) ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக ஃபைனலில் ஆடவுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ரஷீத் கான், தங்கள் அணியின் பலம் என்னவென்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ரஷீத் கான், என்னை பொறுத்தமட்டில் ஒரு அணி 11 வீரர்களையும் சிறந்த வீரர்களாக பெற்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை. அணியில் இருக்கும் வீரர்களின் ரோல்கள் தெளிவுபடுத்தப்பட்டு, அந்த ரோலை அந்த வீரர் சரியாக செய்தாலே போதும். ஒரு அணியில் 5-6 தலைசிறந்த டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இருப்பதில் பயனில்லை. அந்த அணியை சரியாக வழிநடத்த முடியாது.
அணியின் பேலன்ஸ் தான் முக்கியம். எங்கள் அணி நல்ல பேலன்ஸை பெற்றிருந்தது. அதுதான் நாங்கள் ஃபைனலுக்கு வர காரணம். ஒவ்வொரு வீரருக்கும் அவரது ரோல் என்னவென்பது தெளிவுபடுத்தப்பட்டது. ஆட்டத்தின் எந்தவிதமான சூழலிலும் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கு முழு தயாரிப்பில் இருந்தோம்.
எங்கள் அணி வீரர்களின் மனதில் குழப்பமே இல்லை. ஒவ்வொரு வீரரின் ரோலும் பொறுப்பும் தெளிவாக இருந்தது. ஒரு பவுலர், எங்கு, எப்படி வீசவேண்டும் என்ற திட்டம் தெளிவாக இருந்தது. ஒரு சிறந்த அணிக்கு இதுதான் முக்கியம். போட்டி தொடங்குவதற்கு முன் எங்கள் அணி வீரர்கள் மனதில் எந்த குழப்பமும் இருக்காது. அனைவரும் என்ன செய்யப்போகிறோம் என்பது தெளிவாக தெரியும். அதற்கேற்ப பயிற்சியும் பாசிட்டிவாக செய்தோம். ஃபைனலுக்கு வந்ததில் மகிழ்ச்சி. ஃபைனலில் விஷயங்களை சிம்பிளாக வைத்துள்ளோம். களத்திற்கு சென்று எங்கள் திறமைகளை முழுமையாக வெளிப்படுத்தி மகிழ்ச்சியுடன் ஆடவேண்டும். அவ்வளவுதான் என்று ரஷீத் கான் கூறியுள்ளார்.