இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டி20 போட்டியில் கேஎல் ராகுலை ரன் அவுட் செய்ய கிடைத்த அருமையான வாய்ப்பை, படுமோசமாக தவறவிட்டு காமெடி செய்தனர் நியூசிலாந்து வீரர்கள். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி ஆக்லாந்தில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, நியூசிலாந்தை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவரில் 203 ரன்களை குவித்தது.
நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் கப்டிலும் முன்ரோவும் இணைந்து அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தார்கள். முன்ரோ அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார்.
அவர்கள் அமைத்து கொடுத்த அடித்தளத்தை வீணடிக்காமல், வில்லியம்சனும் டெய்லரும் இணைந்து அதிரடியாக ஆடி அரைசதம் அடித்ததோடு அணியின் ஸ்கோர் 200 ரன்களை கடக்க காரணமாக இருந்தனர். இவர்களின் அதிரடியால் நியூசிலாந்து அணி 20 ஓவரில் 203 ரன்கள் அடித்தது.
Also Read - டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக நடந்த சம்பவம்.. இந்தியா - நியூசிலாந்து போட்டியில் நடந்த சுவாரஸ்யம்
204 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா ஏமாற்றமளித்தாலும், ராகுலும் கோலியும் இணைந்து அபாரமாக ஆடி ஸ்கோர் செய்தனர். இவர்களின் அதிரடியால் 10 ஓவரிலேயே இந்திய அணி 115 ரன்களை அடித்தது. அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த ராகுல் 56 ரன்கள் அடித்தார். கோலி 45 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் அவர்கள் விட்டுச்சென்ற பணியை செவ்வனே செய்த ஷ்ரேயாஸ் ஐயரும் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். 29 பந்தில் 58 ரன்கள் அடித்து 19வது ஓவரிலேயே இந்திய அணியை வெற்றி பெற செய்தார்.
டாப் ஆர்டர்கள் அமைத்து கொடுத்த அதிரடியான அடித்தளத்தால்தான் இந்திய அணியால் எளிதாக வெற்றி பெற முடிந்தது. ரோஹித் சர்மாவின் விக்கெட்டை ஆரம்பத்திலேயே இழந்துவிட்ட போதிலும், ராகுலும் கோலியும் இணைந்து அபாரமாக ஆடினர். அதிலும் ராகுலின் அதிரடி பேட்டிங் வேற லெவலில் இருந்தது. ராகுலை ஆறாவது ஓவரிலேயே வீழ்த்தியிருக்கலாம். ஆனால் அந்த அருமையான வாய்ப்பை நியூசிலாந்து வீரர்கள் தவறவிட்டனர்.
பென்னெட் வீசிய ஆறாவது ஓவரின் இரண்டாவது பந்தை கவர் ஆஃப் திசையில் அடித்தார் ராகுல். அந்த பந்தை டிம் சௌதி பிடித்தார். பந்தை அடித்ததும் அரைகுறை மனதோடு ஓட ஆரம்பித்த ராகுல், சௌதி பந்தை பிடித்ததும் ரன் அவுட்டிற்கான அபாயம் இருப்பதை உணர்ந்து கோலியிடம் வேண்டாம் என்றார். ஆனால் கோலி பின்வாங்குவதாயில்லை. கோலி, ரன்னை ஓடுவதில் உறுதியாக இருந்து ஓடிவிட்டார். ஆனால் ராகுலோ பேட்டிங் கிரீஸிலிருந்து 25% நகர்ந்த நிலையில், அங்கேயே நின்றுவிட்டார்.
அதனால், பந்தை பிடித்த டிம் சௌதிக்கு, பவுலிங் முனையில் ஸ்டம்ப்பை அடிக்க நேரம் நன்றாகவே கிடைத்தது. பொறுமையாக அடித்திருந்தாலே ராகுலை அவுட்டாக்கியிருக்கலாம். ஆனால் அவர் அவசரப்பட்டு, பந்தை வீச, அது ஸ்டம்புக்கு சம்மந்தமே இல்லாமல் சென்றுவிட்டது. உடனே ராகுல், இதுதான் வாய்ப்பு என்று பவுலிங் முனையை நோக்கி வேகமாக ஓடினார். இதற்கிடையே, டிம் சௌதி வீசிய த்ரோவை பிடித்த மற்றொரு வீரர், அவரும் சரியாக த்ரோ விடாததால், ராகுல் பாதுகாப்பாக பவுலிங் க்ரீஸை அடைந்தார். ராகுலை ரன் அவுட் செய்ய கிடைத்த அருமையான வாய்ப்பை நியூசிலாந்து வீரர்கள் தவறவிட்டதும், அதை பயன்படுத்தி அதன்பின்னரும் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார் ராகுல். அந்த வீடியோ இதோ..