
இந்தியாவிற்கும், ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 5ஆவது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்று முதலில் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்து 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக டேவிட் வார்னர் 41 ரன்னும், ஸ்டீவ் ஸ்மித் 46 ரன்களும் எடுத்தனர்.
பின்னர் எளிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு இஷான் கிஷான், ரோகித் சர்மா மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் டக் அவுட் முறையில் ஆட்டமிழந்தனர். பின்னர் விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இருவரும் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். ஒரு கட்டத்தில் விராட் கோலி 67ஆவது அரைசதம் அடிக்க, கேஎல் ராகுல் 16ஆவது அரைசதத்தை அடித்தார். இதையடுத்து விராட் கோலி 85 ரன்களில் ஆட்டமிழக்க கடைசி வரை விளையாடிய கேஎல் ராகுல் 97 ரன்கள் சேர்த்து இந்திய அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்தார்.
இந்தியா 41.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலமாக உலகக் கோப்பையில் முதல் வெற்றியை பதிவு செய்தது. கேஎல் ராகுல் 97 ரன்கள் நாட் அவுட் எடுத்ததன் மூலமாக உலகக் கோப்பையில் ஒரு விக்கெட் கீப்பராக எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்துள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் தோனி ஒரு விக்கெட் கீப்பராக 91 ரன்கள் நாட் அவுட் எடுத்திருந்தார்.
இந்த சாதனையை இன்றைய போட்டியின் போது கேஎல் ராகுல் முறியடித்துள்ளார். 2015 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 85* ரன்களும், 2015ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 65 ரன்களும் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அதற்கு முன்னதாக கடந்த 1999 ஆம் ஆண்டு ராகுல் டிராவிட் உலகக் கோப்பையில் ஒரு விக்கெட் கீப்பராக இலங்கை அணிக்கு எதிராக 147 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு கட்டத்தில் இந்திய அணி 41 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது கேஎல் ராகுல் 91 ரன்களில் இருந்தார். இந்திய அணியின் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட ராகுலுக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. எப்படியிருந்தாலும் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் அடித்தால் மட்டுமே கேஎல் ராகுலால் சதம் அடிக்க முடியும்.
அதுவும், முதலில் சிக்ஸர் அடித்தால் இந்திய அணி வெற்றி பெற்றுவிடும். ஆனால், அவர் பவுண்டரி அடித்து அதன் பிறகு சிக்சர் அடித்தால் அவரால் சதம் அடிக்க முடியும். ஆனால், அவர் எடுத்த உடனே பவுண்டரி அடிக்கும் முயற்சியில் அடிக்கவே பந்து சிக்ஸருக்கு சென்றது. இதன் காரணமாக இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால், அவரது சதம் அடிக்கும் கனவு நிறைவேறாமல் போய்விட்டது. வெற்றிக்குப் பிறகு பேசிய கேஎல் ராகுல் கூறியிருப்பதாவது: "நான் நன்றாக விளையாடினேன், இறுதியில் 100 க்கு எப்படி செல்வது என்று கணக்கிட்டேன். 4 மற்றும் ஒரு சிக்ஸருக்கான ஒரே வழி, ஆனால் அந்த சதத்தை எட்டாததற்கு எந்த கவலையும் இல்லை,”என்று ராகுல் கூறினார்.
மேலும் ஒரு இன்னிங்ஸ் முழுவதும் விக்கெட் கீப்பராக விளையாடியதால், கடுமையான வெயிலின் காரணமாக நான் குளித்துவிட்டு ஒரு அரைமணி நேரம் ஓய்வு எடுக்கலாம் என்று நினைத்தேன். ஆனால், அதற்குள்ளாக டாப் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறிவிட்டனர். இதனால், உடனடியாக களத்திற்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டது.
மைதானத்தில் நாங்கள் பெரிதாக ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை. என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்கு தெரிந்திருந்தது. சிறிது நேரம் டெஸ்ட் கிரிக்கெட் போல் விளையாடுங்கள் என்று விராட் கூறினார். புதிய பந்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கும், பின்னர் சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் மைதானம் சாதகமாக இருந்தது,” என்று கேஎல் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.