கேஎல் ராகுலின் மற்றுமொரு கேவலமான இன்னிங்ஸ்.. அறிமுக போட்டியிலயே அரைசதம் அடித்த இளம் வீரர்

By karthikeyan VFirst Published Sep 26, 2019, 1:36 PM IST
Highlights

விஜய் ஹசாரே தொடரில் பெங்களூருவில் நடந்துவரும் போட்டியில், ஜார்கண்ட் அணிக்கு சவாலான இலக்கை நிர்ணயித்துள்ளது கர்நாடக அணி. கர்நாடக அணியில் மூன்று வீரர்கள் அரைசதம் அடித்து அசத்தினர். 

உள்நாட்டு ஒருநாள் தொடரான விஜய் ஹசாரேவில் இன்றைய ஆட்டங்களில் பெரும்பாலானவை மழையால் ரத்தாகியுள்ளது. ஆனால் கர்நாடகா மற்றும் ஜார்கண்ட் அணிகளுக்கு இடையேயான போட்டி நடந்துவருகிறது. 

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில், டாஸ் வென்ற ஜார்கண்ட் அணி,  கர்நாடக அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய கர்நாடக அணி, 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்களை குவித்தது. 

சர்வதேச கிரிக்கெட்டில் தொடர் சொதப்பலால், இந்திய டெஸ்ட் அணியில் இடத்தை இழந்த கேஎல் ராகுல், தனது திறமையை நிரூபித்து மீண்டும் இந்திய அணியில் தனக்கான இடத்தை கெத்தாக பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அதற்கு அவருக்கு கிடைத்துள்ள சிறந்த வாய்ப்பு இந்த விஜய் ஹசாரே தொடர். ஆனால் இந்த போட்டியிலும் சொதப்பினார் ராகுல்.

தொடக்க வீரராக இறங்கிய ராகுல், படுமந்தமாக ஆடினார். மந்தமாக தொடங்கினாலும், நிலைத்து நின்று, களத்தில் நிலைத்த பின்னர் அடித்து ஆடி, தான் வீணடித்த பந்துகளை சமன் செய்துவிட்டால் பிரச்னையில்லை. ஆனால் கிடைத்த ஸ்டார்ட்டை பெரிய இன்னிங்ஸாக மாற்ற முடியாத ராகுலுக்கு அந்த சோகம் தொடர்ந்து வருகிறது. 51 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 29 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார் ராகுல்.

ஆனால் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இந்த போட்டியில் அறிமுகமான மற்றொரு தொடக்க வீரரான தேவ்தத் படிக்கல், நிதானமாக ஆடி அரைசதம் அடித்தார். அவர் பந்துகளை வீணடித்தாலும் அரைசதம் என்ற மார்க்கை கடந்தார். 83 பந்துகளில் 58 ரன்கள் அடித்த படிக்கல் நல்ல அடித்தளத்தை அமைத்து கொடுத்து ஆட்டமிழந்தார். 

மூன்றாம் வரிசையில் இறங்கிய கிருஷ்ணமூர்த்தி சித்தார்த் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். டாப் ஆர்டர்கள் அமைத்து கொடுத்த அடித்தளத்தை வீணடிக்காமல், அதிரடியாக ஆடி நல்ல ஸ்கோரை எட்ட உதவினர் கேப்டன் மனீஷ் பாண்டேவும், பவன் தேஷ்பாண்டேவும். மனீஷ் பாண்டேவும் தேஷ்பாண்டேவும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து ஸ்கோரை உயர்த்தினர். இருவருமே அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தனர். அரைசதம் அடித்த மனீஷ் பாண்டே 44 பந்துகளில் 52 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, தேஷ்பாண்டே தொடர்ந்து சிறப்பாக ஆடி 70 ரன்களை குவித்தார். அதன்பின்னர் வந்த வீரர்களான கிருஷ்ணப்பா கௌதம், ஷ்ரேயாஸ் கோபால் ஆகியோர் ஏமாற்றமளிக்க, 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் அடித்தது கர்நாடக அணி. 

286 ரன்கள் என்ற சவாலான இலக்கை ஜார்கண்ட் அணிக்கு கர்நாடக அணி நிர்ணயித்துள்ளது. 
 

click me!