அவரைக்கூட 4ம் வரிசையில் இறக்கலாம்.. கபில் தேவ் அதிரடி

By karthikeyan VFirst Published May 9, 2019, 1:09 PM IST
Highlights

உலக கோப்பையே நெருங்கிவிட்ட நிலையில், இன்னும் நான்காம் வரிசை குறித்த கருத்துகளை பல முன்னாள் ஜாம்பவான்கள் தெரிவித்துக்கொண்டுதான் உள்ளார்கள். 

உலக கோப்பை மே மாதம் 30ம் தேதி தொடங்குகிறது. உலக கோப்பைக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டு விட்டன. 

நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு அடுத்தபடியாகவே இந்திய அணி அறிவிக்கப்பட்டு விட்டது. இந்திய அணியின் 4ம் வரிசை வீரராக பார்க்கப்பட்ட ராயுடு, அண்மைக்காலமாக சொதப்பியதால் அவரை நீக்கிவிட்டு உலக கோப்பை அணியில் விஜய் சங்கர் சேர்க்கப்பட்டார். 

நடப்பு ஃபார்மின் அடிப்படையிலும் விஜய் சங்கர் ஒரு ஆல்ரவுண்டர் என்பதால், தேவைப்படும்போது பவுலிங்கும் வீசுவார் என்பதாலும் அவரை அணியில் எடுத்ததாக தேர்வுக்குழு தலைவர் பிரசாத் விளக்கமளித்திருந்தார். இந்திய அணியில் நான்காம் வரிசை சிக்கல் நீண்டகாலமாக இருந்துவருகிறது. யுவராஜ் சிங்கிற்கு அடுத்த அந்த இடத்தை பூர்த்தி செய்வதற்காக பல வீரர்கள் பரிசோதிக்கப்பட்டனர். 

பல சோதனை முயற்சிகளுக்கு பிறகு ராயுடு உறுதி செய்யப்பட்டதாக கருதப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் நடந்த ஆஸ்திரேலியா, நியூசிலாந்து தொடர்களில் அருமையாக ஆடி உலக கோப்பை அணியில் இடம்பிடித்துவிட்டார் விஜய் சங்கர். 

விஜய் சங்கர் மிடில் ஓவர்களில் நிதானமாக பார்ட்னர்ஷிப் அமைத்து சிங்கிள் ரோடேட் செய்வதுடன் அவ்வப்போது பெரிய ஷாட்டுகளை அடித்தும் ஆடுகிறார். எனவே விஜய் சங்கர் நான்காம் வரிசையில் இறங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்லாமல் கேஎல் ராகுலும் அணியில் இருப்பதால் அவரை இறக்குவதற்கான வாய்ப்பும் உள்ளது. மேலும் நான்காம் வரிசையை இந்த வீரருக்கு என்று உறுதி செய்யாமல், சூழலுக்கு ஏற்றவாறு வீரர்களை களமிறக்குவதற்கான திட்டத்தையும் இந்திய அணி வைத்துள்ளது. 

உலக கோப்பையே நெருங்கிவிட்ட நிலையில், இன்னும் நான்காம் வரிசை குறித்த கருத்துகளை பல முன்னாள் ஜாம்பவான்கள் தெரிவித்துக்கொண்டுதான் உள்ளார்கள். எந்த பேட்டிங் வரிசையையும் இந்த வீரருக்குத்தான் என்று ஒதுக்காமல் சூழலுக்கு ஏற்ற வகையில் வீரர்களை களமிறக்க வேண்டும் என ஏற்கனவே கபில் தேவ் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், உலக கோப்பையில் பேட்டிங் ஆர்டர் குறித்து பேசிய கபில் தேவ், 2011 உலக கோப்பை இறுதி போட்டியில் யுவராஜ் சிங்கிற்கு முன்னதாக தோனி களத்திற்கு வந்தார். தற்போதைய சூழலில் யார் வேண்டுமானாலும் எந்த வரிசையிலும் இறங்கலாம். கடந்த 10 ஆண்டுகளில் கிரிக்கெட் பெரியளவில் மாறியிருக்கிறது. அதனால் தொடக்க வீரர்களை தவிர மற்ற எந்த வரிசையையும் இன்னாருக்குத்தான் என்று நிரந்தரமாக ஒதுக்க தேவையில்லை. யார் வேண்டுமானாலும் எந்த வரிசையிலும் இறங்கலாம். தொடக்க வீரரைக்கூட 4ம் வரிசையில் இறக்கலாம் என்று கபில் தேவ் தெரிவித்துள்ளார். 

கேஎல் ராகுல் கூட தொடக்க வீரர் தான். அவரும் உலக கோப்பை அணியில் உள்ளார். எனவே அவரைக்கூட நான்காம் வரிசையில் இறக்கலாம். விஜய் சங்கர் அல்லது ராகுல் ஆகிய இருவரில் ஒருவரை இறக்குவதுதான் இந்திய அணியின் தற்போதைய திட்டமாக இருக்க வேண்டும்.

click me!