
ஐபிஎல் 15வது சீசனில் புதிதாக களமிறங்கிய ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி அறிமுக சீசனிலேயே ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைத்தது.
இந்த சீசனில் ஹர்திக் பாண்டியா பேட்டிங், பவுலிங், கேப்டன்சி என அனைத்திலும் அபாரமாக செயல்பட்டு குஜராத் டைட்டன்ஸ் அணியை முன்னின்று வழிநடத்தி கோப்பையை வென்று கொடுத்தார்.
ஃபைனலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 4 ஓவர்கள் பந்துவீசி வெறும் 17 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து சஞ்சு சாம்சன், பட்லர், ஹெட்மயர் ஆகிய 3 பெரிய விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்திக் பாண்டியா, பேட்டிங்கிலும் பொறுப்பாக செயல்பட்டு 34 ரன்கள் அடித்து குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்தார். ஆட்டநாயகன் விருதையும் அவரே வென்றார்.
ஃபைனலில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றதும், அந்த அணி வீரர்களும், அணி நிர்வாகத்தினரும் மைதானத்திற்குள் கட்டியணைத்து வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த சீசன் முழுக்க தனது கணவர் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியில் குஜராத் அணி ஆடிய அனைத்து போட்டிகளையும் நேரில் பார்த்து பாண்டியாவையும் குஜராத் அணியையும் உற்சாகப்படுத்திய நடாஷா, ஃபைனலில் குஜராத் அணி ஜெயித்ததும், மைதானத்திற்குள் ஓடிவந்த தனது கணவர் பாண்டியாவை கட்டியணைத்து வெற்றி மகிழ்ச்சியை கொண்டாடித்தீர்த்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.