மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அம்பாதி ராயுடுவின் அதிரடி அரைசதத்தால் 20 ஓவரில் 218 ரன்களை குவித்த சிஎஸ்கே அணி, 219 ரன்களை மும்பை அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில் சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் ஆடிவருகின்றன. டெல்லியில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா, சிஎஸ்கேவை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.
இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 4 ரன்னில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் டுப்ளெசிஸும் மொயின் அலியும் இணைந்து மும்பை அணியின் பவுலிங்கை அடித்து ஆடினர். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த மொயின் அலி, 36 பந்தில் 58 ரன்னில் ஆட்டமிழக்க, ரெய்னா வெறும் 2 ரன்னில் அவுட்டானார்.
அதிரடியாக ஆடி 28 பந்தில் 50 ரன்னில் பொல்லார்டின் பந்தில் டுப்ளெசிஸ் ஆட்டமிழக்க, அடுத்த பந்திலேயே ரெய்னா 2 ரன்னில் அவுட்டாக, 12 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் அடித்திருந்தது.
சிஎஸ்கே அணியின் ஸ்கோர் டுப்ளெசிஸ் அவுட்டாகும்போது மிகச்சிறப்பாக இருந்த நிலையில், அடுத்த ஒருசில ஓவர்களில் ராயுடுவும் ஜடேஜாவும் மந்தமாக ஆட, 15வது ஓவரில் பவுண்டரியும் சிக்ஸரும் கிடைக்க, குல்கர்னி வீசிய 16வது ஓவரில் ராயுடு 2 சிக்ஸர்களை விளாசினார். அதன்பின்னர் டெத் ஓவர்களில் பும்ரா, போல்ட் ஆகிய சாம்பியன் பவுலர்களின் பவுலிங்கையும் வெளுத்து கட்டிய ராயுடு, பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி 27 பந்தில் 72 ரன்களை விளாச, சிஎஸ்கே அணி 20 ஓவரில் 218 ரன்களை குவித்து 219 ரன்கள் என்ற இலக்கை மும்பை அணிக்கு நிர்ணயித்துள்ளது சிஎஸ்கே.