சச்சின் டெண்டுல்கரை போலவே அவரது மகன் அர்ஜுன் டெண்டுல்கரும் அறிமுக ரஞ்சி போட்டியில் சதமடித்து அசத்தியுள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டின் ஆல்டைம் கிரேட் வீரர். 24 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் ஆடி 100 சதங்களுடன் 34 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்களை குவித்துள்ள சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட் கடவுள் என்றழைக்கப்படுகிறார்.
சர்வதேச கிரிக்கெட்டில் ஏகப்பட்ட பேட்டிங் சாதனைகளை தன்னகத்தே கொண்டுள்ள சச்சின் டெண்டுல்கர் முதல் தர கிரிக்கெட் தொடரான ரஞ்சி தொடரில் அவரது அறிமுக போட்டியில் சதமடித்து அசத்தினார். 1988ம் ஆண்டு சச்சின் அவரது ரஞ்சி போட்டியில் சதமடித்தார். அதேபோலவே, சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் அவரது அறிமுக ரஞ்சி போட்டியில் சதமடித்து அசத்தியுள்ளார்.
23 வயதான அர்ஜுன் டெண்டுல்கர் ரஞ்சி தொடரில் கோவா அணியில் ஆடுகிறார். கோவா - ராஜஸ்தான் இடையேயான போட்டிதான் அர்ஜுன் டெண்டுல்கரின் முதல் ரஞ்சி போட்டி. இந்த போட்டியில் கோவா அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. கோவா அணி வீரர் சுயாஷ் பிரபுதேசாய் அபாரமாக ஆடி இரட்டை சதமடித்து 212 ரன்களை குவித்தார். 2ம் நாளான இன்றைய ஆட்டத்தில் அர்ஜுன் டெண்டுல்கர் சதமடித்தார். அறிமுக போட்டியிலேயே தனது தந்தையை போல சதமடித்து அசத்தினார் அர்ஜுன் டெண்டுல்கர். 120 ரன்களை குவித்து அர்ஜுன் டெண்டுல்கர் ஆட்டமிழந்தார்.
கோவா அணி 2ம் நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 493 ரன்களை குவித்துள்ளது. ரஞ்சி தொடரில் அறிமுக இன்னிங்ஸிலேயே சதமடித்த அர்ஜுன் டெண்டுல்கருக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறிவருகின்றனர்.