புதுச்சேரியில் உடனடியாக என்.ஐ.ஏ அலுவலகம் வேண்டும்.. பரபரப்பை கிளப்பிய அதிமுக..

By Thanalakshmi VFirst Published Oct 28, 2022, 3:40 PM IST
Highlights

புதுச்சேரியில் தேசிய அளவில் பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்கள் புரிவோர்களின் நடவடிக்கை சரியான முறையில் கண்காணிக்கப்படாமல் உள்ளதால் புதுச்சேரி மாநிலத்தில் தேசிய புலனாய்வு முகமையின் ஒரு அமைப்பை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என்று அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.
 

இதுக்குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது;

கோவையில் நடைபெற்ற பயங்கரவாத சம்பவத்தில் குறிப்பிட்ட மதத்தின் மத குருவே தீவிரவாதிகளின் மீது தமிழக அரசு பாரபட்சம் காட்டாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தும் சூழ்நிலையை திமுக அரசு ஏற்படுத்தியுள்ளது.மேலும் தமிழகத்தில் தீவிரவாத செயல்களின் மீது உரிய நடவடிக்கையை எடுக்காமல், மதத்துடன் சம்பந்தப்படுத்தி ஓட்டு வங்கிக்காக அற்ப அரசியல் லாபம் தேடும் முயற்சியில் திமுக அரசு ஈடுபட்டுள்ளது. 

யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் என்.ஐ.ஏ தேசிய புலனாய்வு முகமை அமைக்கப்பட வேண்டும். ஏனெனில் புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் என்ற போர்வையில் சிலர் இங்கு வந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றன. நான்கு கடற்கரை பகுதிகள் உள்ளடக்கிய பிராந்தியமாக உள்ள புதுச்சேரியில் பல நேரங்களில் கொடூரமான அச்சுறுத்தல் சம்பவங்கள் நடைபெற்று உள்ளன. 

மேலும் படிக்க:கோவை கார் வெடி விபத்து..! பாஜக தலைவர் அண்ணாமலையை தான் முதலில் என்ஐஏ விசாரிக்க வேண்டும்..! செந்தில் பாலாஜி

அதுமட்டுமின்றி தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் தடை செய்யப்பட்ட பல்வேறு இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் சர்வ சாதரணமாக இங்கு செயல்பட்டு வருகின்றன. எனவே கண்ணுக்குத் தெரியாத தீவிரவாத செயல் புரிபவர்கள் கண்காணிக்கப்பட வேண்டும். தற்பொழுது கூட காரைக்கால் பகுதியில் இருந்து சிலரை என்.ஐ.ஏ கைது செய்து உள்ளது

தேசிய அளவில் பல்வேறு குற்ற செயல்கள் புரிவோர்களின் நடவடிக்கை இங்கு சரியான முறையில் கண்காணிக்கப்படாததால் புதுச்சேரி மாநிலத்தில் தேசிய புலனாய்வு முகமையின் ஒரு அமைப்பை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும். இது தொடர்பாக துணைநிலை ஆளுநர்,முதலமைச்சர், உள்துறை அமைச்சர் ஆகியோர் புதுச்சேரி அரசு சார்பில் மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க:கோவையில் 3000 போலீசார் குவித்திருப்பது ஏன்..? அமைச்சரின் மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம்..! வானதி சீனிவாசன் ஆவேசம்

click me!