குழப்புவதிலேயே தெளிவாகக் குழப்புவது என ஒன்று உண்டு. சசிகலா-பன்னீர் அணிக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்த, கட்சி பெயர்களையே அதற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.
பன்னீர்செல்வம் அணிக்கு "அதிமுக புரட்சித்தலைவி அம்மா" என்று பெயர். சசிகலா அணிக்கு "அதிமுக அம்மா" என்று பெயர்.
அதிமுக என்பது இரு அணிகளுக்கும் பொதுவானது. அதன் பின்னால் உள்ள "புரட்சிதலைவி அம்மா" பன்னீருக்கு சொந்தமானது. அதேபோல் அதிமுகவிற்கு பின்னால் வரும் "அம்மா" சசிகலாவுக்கு சொந்தமானது.
இப்போது புரிகிறதா, தேர்தல் ஆணையம் எவ்வளவு தெளிவான குழப்பத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது என்று.
ஒரு படத்தில் நடிகர் செந்தில், பூவை - பூவென்றும் சொல்லலாம், புஷ்பம் என்றும் சொல்லலாம், நீங்கள் சொல்வது மாதிரியும் சொல்லலாம் என்று சொல்லுவார்.
அதுபோல, அம்மாவை அம்மா என்றும் சொல்லலாம், ஆத்தா என்றும் சொல்லலாம், மம்மி என்றும் சொல்லலாம். தேர்தல் ஆணையம் சொல்வது போல், புரட்சி தலைவி, அம்மா என்றும் சொல்லலாம்.
இதைவிட எப்படி குழப்புவது? என்றுதான் தெரியவில்லை. இதே போன்ற ஒரு குழப்பம், வடிவேலு நடித்த இம்சை அரசன் 23 -ம் புலிகேசி படத்தில் வரும்.
அதில், ‘நாகபதனி’ மற்றும் ‘நாகப்பதனி’ என இரண்டு சாதிகளுக்கு இடையே சண்டைப் போட்டி நடக்கும்.
இரண்டும் ஒருசாதி தானே என்று கேட்கும் போது – நடுவில் ‘ப்’ இல்லாததை கவனியுங்கள் மன்னா என்பார்கள். அதாவது, இவை இரண்டும் வெவ்வேறு குழுக்கள் ஆகும்.
அதாவது ‘இந்தியன் பேங்க்’ என்பதும் ‘பேங்க் ஆஃப் இந்தியா’ என்பதும், ஒரே அர்த்தத்தில் இருந்தாலும், இரண்டும் வெவ்வேறு வங்கிகளாக செயல்படுபடுகின்றன.
அதுபோல, "அதிமுக அம்மா", "அதிமுக புரட்சித்தலைவி அம்மா" ஆகிய இவை இரண்டும் வெவ்வேறு கொள்கைக் கொண்ட அமைப்புகளாக செயல்படுகின்றன.
நாம் என்ன சொல்ல, அம்மாவை அம்மா என்றும் சொல்லலாம், புரட்சி தலைவி என்றும் சொல்லலாம், தேர்தல் ஆணையம் சொல்வது மாதிரியும் சொல்லலாம்.