எடப்பாடி பழனிச்சாமி பதவியே செல்லாது.. மகனை காக்க மக்களவை சபாநாயகருக்கு ஓபிஎஸ் எழுதிய கடிதம்!

By Asianet TamilFirst Published Jul 24, 2022, 8:12 AM IST
Highlights

எடப்பாடி பழனிசாமியின் எந்தப் பரிந்துரைகளையும் ஏற்க வேண்டாம் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் எழுந்த மோதலில் ஓ. பன்னீர்செல்வத்தைக் கட்சியிலிருந்து கட்டம் கட்டி நீக்கி, இடைக்கால பொதுச்செயலாளர் ஆகிவிட்டார் எடப்பாடி பழனிச்சாமி.  ஓபிஎஸ்ஸை மட்டுமல்லாமல் அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த மூத்த மகனும் தேனி தொகுதி  எம்.பி.யுமான ரவீந்திரநாத், இளைய மகன் ஜெய பிரதீப் ஆகியோரை கட்சியிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி நீக்கிவிட்டார். கட்சிப் பதவியோடு அல்லாமல் தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை ஓபிஎஸ்ஸிடம் இருந்து பறிக்க, ஆர்.பி. உதயகுமாரை அந்தப் பதவிக்கு தேர்ந்தெடுத்து தமிழக சட்டப்பேரவை சபாநாயகரிடம் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் வழங்கியுள்ளார்.

இதையும் படிங்க: என்ன கட்சியில் இருந்து நீக்கிட்டாங்க! உச்சநீதிமன்றத்தில் முறையிட்ட OPS! தலைமை நீதிபதி என்ன சொன்னார் தெரியுமா?

ஆனால், சட்டப்பேரவையில் இபிஎஸ் தரப்பு செய்யும் மாற்றங்களை அங்கீகரிக்கக் கூடாது என்று ஓபிஎஸ் அதற்கு முன்பே கடிதம் அளித்திருந்தார். இது ஒரு புறம் இருக்க, நாடாளுமன்றம் மக்களவையில் ஒரே ஒரு அதிமுக உறுப்பினராக இருக்கும் ரவீந்திரநாத், அதிமுக எம்.பி. கிடையாது என்றும் அவர் அதிமுக எம்.பி. என்ற அந்தஸ்தை ரத்து செய்யும்படியும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் கோரிக்கையை நிராகரிக்கும்படி ஓபிஎஸ் மகன் ரவீந்திர நாத் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கடிதம் அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே மக்களவை சபாநாயகருக்கு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கடிதம் அனுப்பியுள்ளார்.

இதையும் படிங்க: அதிமுகவின் வங்கி கணக்குகளை முடக்குங்க... ஸ்ட்ரைட்டாக ஆர்பிஐக்கு கடிதம் எழுதிய ஓபிஎஸ்

அந்தக் கடிதத்தில், “அதிமுக தலைமை நிர்வாகிகள் சிலர், கட்சி ஒருங்கிணைப்பாளரின் ஒப்புதல் இல்லாமல் கடந்த ஜூலை 11-ஆம் தேதி கட்சி பொதுக்குழுவை கூட்டினர். இது கட்சி விதிகளுக்கு எதிரானது என்பதால், அந்த நிர்வாகிகளை கட்சி அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்கினேன். கட்சிக்கு எதிராக செயல்படும் இவர்களது நடவடிக்கைகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விதிகளுக்கு புறம்பாக நடத்தப்பட்ட பொதுக்குழு கூட்டம் மற்றும் அதில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு எதிராக உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, நிலுவையில் உள்ளது.

இதையும் படிங்க: மக்களவையில் ஓபிஎஸ் மகனுக்கு ஆப்பு வைக்க துடிக்கும் இபிஎஸ்.. அப்பாவை போலவே சபாநாயகருக்கு கடிதம் கொடுத்த ஓபிஆர்!

இந்நிலையில், தன்னை கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக சுய பிரகடனம் செய்துகொண்ட பழனிசாமி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து மக்களவை எம்.பி.யான ஓ.பி. ரவீந்திரநாத்தை நீக்கி அறிவித்ததாக என்னுடைய கவனத்துக்கு வந்தது. பழனிசாமியின் பதவியே செல்லாது. எனவே, எனது ஒப்புதல் இன்றி, அவரது பரிந்துரைகளை ஏற்க வேண்டாம்.” என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

click me!