ஆவினில் மீண்டும் சோதனை.. விஜிலென்ஸ் அதிகாரிகள் அதிரடி..மீண்டும் சிக்கும் கே.டி.ஆர் !!

By Raghupati RFirst Published Jan 26, 2022, 8:02 AM IST
Highlights

கடந்த அதிமுக ஆட்சியில் விதிகளை மீறி முறைகேடாக ஆவினில் பணி நியமனம் பெற்ற 236 நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

கடந்த 2019 - 20 ஆம் ஆண்டுகளில் மதுரை ஆவினில் 61 நியமனங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பங்களை நேர்காணலுக்கு அழைக்காதது உள்ளிட்ட புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக ஏற்கனவே நிர்வாக இயக்குனர் சுப்பையன் உத்தரவின் பேரில் தணிக்கைபிரிவு சேர்ந்த இணை இயக்குனர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு விசாரணை நடத்தி வந்தனர். அதில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது.

தற்போது மீண்டும் தணிக்கை குழுவினர் தங்களுடைய விசாரணையை துவக்கி உள்ள நிலையில் ஆவின் விஜிலன்ஸ் பிரிவிற்கு ஏற்கனவே வந்த பல்வேறு புகார்கள் தொடர்பாகவும் தற்போது ஆவின் விஜிலன்ஸ் அதிகாரிகள் டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

2019ஆம் ஆண்டு தீபாவளியின் போது சிறந்த முகவர்கள் 200 பேருக்கு சுமார் 5,000 மதிப்பிலான பேக் பரிசாக வழங்கப்பட்டது. இதற்காக பத்து லட்ச ரூபாய் செலவழிக்க பட்டதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது.  ஆனால் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே பேக் வழங்கியதாக புகார் எழுந்துள்ளது. அதேபோன்று 2019ஆம் ஆண்டு தனியார் நிகழ்ச்சி ஒன்றுக்கு அதிகாரிகள் ஒப்புதல் இல்லாமல் விளம்பரம் வழங்கப்பட்டது. இதற்கு 20 லட்ச ரூபாய் கணக்கு காட்டப்பட்டு உள்ளதாகவும் இவற்றின் உண்மைத் தன்மை குறித்தும் தணிக்கை குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடர்பு உள்ளதா என்பது விசாரணையின் முடிவில் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2 தினங்களாக  ராஜேந்திர பாலாஜியின் உதவியாளர்கள் பலராமன் மற்றும் பாபுராஜ் ஆகிய இருவரிடமும் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னவன் விசாரணை மேற்கொண்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெறும் என கூறப்படுகிறது. 

பால்வளத் துறை அமைச்சர் நாசர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘ கடந்த அதிமுக ஆட்சியில் ஆவின் நிறுவனத்தில் முறைகேடுகளாக பணியில் சேர்க்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டு, அதற்கான புதிய பணியிடங்கள் தமிழ்நாடு தேர்வாணையத்தின். மூலம் நிரப்பப்படும். விதிகளை மீறி முறைகேடாக பணியில் சேர்ந்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறினார். ஆவின் முறைகேடு விடாது முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியை துரத்தி வருகிறது. மேலும் அவர் மீதான வழக்கு இன்னும் இறுகலாம் என்று கூறப்படுகிறது.

click me!