மோசமான ரயில் விபத்துக்கு பிறகு தார்மீக அடிப்படையில் ராஜினாமா செய்த ரயில்வே அமைச்சர்கள் யார் யார்?

By Ramya sFirst Published Jun 3, 2023, 5:16 PM IST
Highlights

இந்தியாவில் நடந்த பெரிய ரயில் விபத்துக்கு பிறகு ராஜினாமா செய்த ரயில்வே அமைச்சர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்

பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஷாலிமார்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் மோதிய விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர். மேலும் 900 பேர் காயம் அடைந்ததாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இந்த துயர சம்பவம் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நடந்த மிக மோசமான ரயில் விபத்துகளில் ஒன்றாக மாறியுள்ளது.

இதனிடையே இந்த பயங்கர விபத்துக்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று சமூக வலைதளங்களில் எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், இந்திய அரசியல் அரங்கில் ராஜினாமாக்கள் அரிதாகவே காணப்படுகின்றன, குறிப்பாக தார்மீகப் பொறுப்பின் விஷயங்களில். எவ்வாறாயினும், இந்த சம்பவத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, ராஜினாமா செய்யும் ஒரு அடையாளச் செயல் கூட இழந்த உயிர்கள் மற்றும் முழுமையான விசாரணையின் அவசியத்தின் உண்மையான அக்கறையை வெளிப்படுத்தலாம் என்று பலர் நினைக்கிறார்கள்.

அந்த வகையில் இந்தியாவில் நடந்த பெரிய ரயில் விபத்துக்குப் பிறகு ராஜினாமா செய்த ரயில்வே அமைச்சர்களின் பட்டியலை பார்க்கலாம்.

லால் பகதூர் சாஸ்திரி: 1956 ஆம் ஆண்டு நவம்பரில் சுமார் 142 பேரின் உயிரைப் பறித்த தமிழ்நாட்டில் நடந்த அரியலூர் ரயில் விபத்துக்கு அப்போதைய ரயில்வே அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி தார்மீகப் பொறுப்பேற்றார். சாஸ்திரியின் இந்த செயல் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் சாஸ்திரிக்கு பாராட்டுகளைப் பெற்று தந்தது. நேரும் சாஸ்திரியின் நேர்மையை பாராட்டினார். இதன் விளைவாக சாஸ்திரியின் புகழ் உயர்ந்தது, பின்னர் அவர் மற்ற அமைச்சர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டு இறுதியில் இந்தியாவின் பிரதமரானார்.

நிதிஷ் குமார்: லால் பகதூர் சாஸ்திரி பதவி விலகி 43 ஆண்டுகளுக்குப் பிறகு ரயில்வே அமைச்சர் பதவியில் இருந்து இரண்டாவது முறையாக ராஜினாமா நடந்தது. ஆகஸ்ட் 1999 இல், நிதீஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார், அஸ்ஸாமில் கெய்சல் ரயில் விபத்தில் குறைந்தது 290 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கு தார்மீக பொறுப்பேற்று நிதிஷ்குமார் அமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.

மம்தா பானர்ஜி: 2000 ஆம் ஆண்டில், ஒரே ஆண்டில் இரண்டு ரயில் விபத்துக்களுக்கு தார்மீக பொறுப்பேற்று மம்தா பானர்ஜி தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், அவரது ராஜினாமாவை அப்போதைய பிரதமர் அடல் பிகார் வாஜ்பாய் நிராகரித்து விட்டார்.

சுரேஷ் பிரபு: 2016 ஆம் ஆண்டில், கைஃபியத் எக்ஸ்பிரஸ் மற்றும் பூரி-உத்கல் எக்ஸ்பிரஸ் ஆகிய நான்கு நாட்களில் இரண்டு ரயில் தடம் புரண்டதற்கு தார்மீகப் பொறுப்பேற்று, 2017 ஆகஸ்ட் 23 அன்று ரயில்வே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்தார் சுரேஷ் பிரபு. எனினும் அவரை காத்திருக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார், ஆனால் பிரபு அடுத்த மாதம் பதவி விலகினார். கான்பூர் அருகே பாட்னா-இந்தூர் விரைவு ரயிலின் 14 பெட்டிகள் தடம் புரண்டதில் 150 பேர் உயிரிழந்தனர். இது 1999 க்குப் பிறகு நடந்த மிக மோசமான ரயில் விபத்துகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இந்த சூழலில் ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தை தொடர்ந்து, முந்தைய சம்பவங்களைப் போலவே, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வருகிறது. தார்மீக அடிப்படையில் அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர்.

எனினும் ராஜினாமா கோரிக்கை குறித்து அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, பதிலளித்த அமைச்சர் தனது முதன்மையான கவனம் தற்போது நடைபெற்று வரும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் உள்ளது என்று கூறினார்.

click me!