புதிய 100 ரூபாய் நோட்டின் மாதிரியை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. மகாத்மா காந்தி படத்துடன் ஊதா நிறத்தில் உள்ள புதிய 100 ரூபாய் நோட்டு மாதிரி வெளியிடப்பட்டுள்ளது. குஜராத் பதானில் உள்ள ராணி கி வாவ் என்ற பிராதன குளத்தின் படம் 100 ரூபாய் நோட்டில் இடம் பெற்றுள்ளது. யுனெஸ்கோவில் உலக புராதன சின்னங்கள் பட்டியலில் ராணி கி வாவ் இடம் பெற்றுள்ளது.
முன்னதாக கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி இரவு 12 மணிக்கு பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து புதிய 2000, 500 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டது. இதனையடுத்து புதிய 10 மற்றும் 50 ரூபாய்கள் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. புதிய 10 மற்றும் 50 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படுவதற்கு முன்பு பழைய 10 மற்றும் 50 ரூபாய் செல்லாது என்று வதந்திகள் பரவின. ஆனால் பழைய ரூபாய் நோட்டுகள் செல்லும் என ரிசர்வ் வங்கி தெரிவித்தது.
இந்நிலையில் தற்போது ஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. புதிய, 100 ரூபாய் நோட்டு புழக்கத்தில் வந்தாலும், பழைய, 100 ரூபாய் நோட்டு செல்லுபடியாகும். இது பழைய 100 ரூபாய் நோட்டை விட அளவில் சிறியதாக இருக்கும். அதேபோல் புதிய 10 ரூபாயை விட பெரியதாக இருக்கும். இந்த 100 ரூபாய் நோட்டு அடுத்த மாதம் துவக்கத்தில் வெளியிடப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.