மும்பையில் தொடர்ந்து மழை கொட்டி வருவதால் சமைக்க முடியாமல் தவிக்கும் 1000 ஏழை மக்களுக்கு டப்பாவலாக்கள் உணவளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் பணிக்கு செல்வோருக்கு பெரும் உதவியாக இருப்பது டப்பாவாலாக்கள்தான். இவர்கள் வீடுகளில் உணவுகளை சேகரித்து அலுவசகத்தில் உள்ளவர்களுக்கு கொண்டு சேர்க்கின்றனர். மேலும் சமையல் செய்தும், ஹோட்டல்களுக்குச் சென்றும் சேகரித்து உணவுகளை சப்ளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மும்பையில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கனமழை கொட்டி வருகிறது. இதனால் மும்பை நகரமே பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளது. இடைவிடாது பெய்த மழை, நகரை சாதாரணமாக விட்டுவிடவில்லை. நீர் நிரம்பிய சாலைகள், கடும் போக்குவரத்து நெரிசல், விபத்துகள், தீ அவசரங்கள், நீர் நிரம்பிய ரயில் பாதைகள், பெரும் பள்ளங்கள், சாலையில் வெளிவரும் சாக்கடை நீர் என மும்பை நகரமே முடங்கிப் போயுள்ளது.
கனமழையால் அந்தேரி ரயில் நிலையத்தில் பாலம் இடிந்து விழுந்ததில், டப்பாவாலாக்களின் பணிகளும் பாதிக்கப்பட்டது. ஆனால் டப்பாவாலாக்கள் உணவளிக்கும் பணியை மட்டும் நிறுத்தவில்லை. தாமாக முன்வந்து, ஏழை மக்களுக்கு உதவி செய்துள்ளனர். மும்பை டப்பாவாலாக்கள் 1,000 ஏழை மக்களுக்கு உணவளித்துள்ளனர்.
கடந்த ஆண்டு லட்சக்கணக்கான விவசாயிகள் மும்பை நோக்கி நடைபயணமாக வந்தபோது, அவர்களுக்கு டப்பாவாலாக்கள் உணவளித்து காத்தனர். மேலும் ரொட்டி வங்கி தொடங்கியுள்ள டப்பாவாலாக்கள் கனமழை மற்றும் போக்குவரத்து பிரச்சனையால் மீதமாகும் உணவுகளை சேகரித்து ஏழைகளுக்கு வழங்கி வருகின்றனர்.
தற்போது 1,000 பேருக்கு உணவளித்து டப்பாவாலாக்கள் அசத்தியுள்ளனர். அன்றாடம் வேலை செய்தால்தான் தங்களுக்கான உணவு கிடைக்கும் என்று வாழ்ந்து வரும் டப்பாவாலாக்கள் பசியால் துடிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்குவது மும்பையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.