போலீஸ்காரருக்கு பளார் விட்ட பாஜக தலைவர்... வைரலாகும் வீடியோவால் பரபரப்பு!

Nov 5, 2018, 12:14 PM IST

போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக தலைவர் மனோஜ் திவாரி, போலீஸ்காரரின் கன்னத்தில் பளார் விட்டார். இச்சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.

டெல்லியில் சிக்னேச்சர் பாலத் திறப்பு விழா நேற்று மாலை நடந்த்து. இதில், எம்.பி.யும் மாநில பாஜக தலைவருமான மனோஜ் திவாரி கலந்து கொண்டார். டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் பாலத்தைத் திறந்து வைத்தார்.

திறப்பு விழாவுக்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வருவதற்கு முன்னதாகவே, மனோஜ் திவாரி வந்துவிட்டார். அப்போது ஆம் ஆத்மி ஆதரவாளர்களுக்கும் மனோஜ் திவாரி மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதை பார்த்த போலீசார், இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். பின்னர், மனோஜ் திவாரியை அங்கிருந்து தனியே அழைத்து வர முயற்சித்தனர். இதில், ஆத்திரமடைந்த மனோஜ் திவாரி, போலீஸ்காரரின் கன்னத்தில் அறைந்தார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பாஜக எம்பி, போலீஸ்காரரின் கன்னத்தில் அறைந்த காட்சி, வீடியோவாக வைரலாகி வருகிறது. இதனால், அரசியல் வட்டாரத்தில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், ஆம் ஆத்மி எம்எல்ஏ அமனத்துல்லா கான், தன்னைத் தள்ளிவிட்டதாக மனோஜ் திவாரி குற்றம் சாட்டியுள்ளார். அதுதொடர்பான வீடியோவை டெல்லி பாஜக வெளியிட்டுள்ளது.