Oct 20, 2018, 12:08 PM IST
தசரா விழாவையொட்டி நடந்த ரயில் விபத்தின்போது, ஆபத்தில் இருந்தவர்களைக் காப்பாற்றுவதைவிட்டுவிட்டு,செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்த மக்களை என்னவென்று சொல்வது?
பஞ்சாப் மாநிலம் அருகே உள்ள ஜோரா பதாக் பகுதியில் தசரா விழாவையொட்டி ராவண வதம் நடைபெற்றது. அப்போது ராவணன் உருவபொம்மையை எரித்துக் கொண்டிருந்தனர். இன்னொரு பக்கம் பட்டாசுகளும் வெடித்தன. அப்போது பெரிய பெரிய தீ வந்து விழுந்ததைப் பார்த்த மக்கள் பயந்து ஓடியுள்ளனர். அருகே இருந்த ரயில்வே தண்டவாளத்தின் மீது மக்கள் ஏறி ஓடியபோது, ஜலந்தரில் இருந்து அமிர்தசரஸ் வந்த ரயில் அவர்கள் மீது மோதியது. இந்த கோர விபத்தில் பலி எண்ணிக்கை 61-ஆக உயர்ந்துள்ளது. மேலும் காயமடைந்த 72 பேர் குருநானக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து தொடர்பாக எடுக்கப்பட்ட வீடியோக்கள் தற்போது ஒவ்வொன்றாக வலைதளங்களில் பரவி வருகின்றன. அவற்றில் இடம்பெறும் பலர் செல்ஃபி மோகத்தால் விபத்தைப் படம் பிடிப்பதைப் பார்க்கும்போது நெஞ்சு பதறுகிறது. மனிதர்களின் கோரச்சாவையும் படம்பிடிக்கும் அவர்களை மனநோயாளிகள் என்று சொன்னாலும் தவறில்லை.