காய்கறிகள் சாப்பிட குட்டிஸ்கள் அடம்பிடிக்குதா? அப்போ 'இப்படி' செஞ்சு கொடுங்க.. தட்டு காலியாகும்!

By Kalai SelviFirst Published Jul 5, 2024, 7:00 AM IST
Highlights

Vegetable Uttapam Recipe : குழந்தைகளுக்கான சத்தான காய்கறி ஊத்தப்பம் ரெசிபி எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தினமும் காலை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இட்லி தோசை தான் செய்து கொடுக்கிறீர்களா..? புதுமையாக வேறு ஏதேனும் அவர்களுக்கு செய்து கொடுக்க விரும்பினால் உங்களுக்கான பதிவு தான் இது.

ஆம், இன்று நாம் காய்கறி ஊத்தப்பம் எப்படி செய்வது என்று தான் இந்த பதிவில் பார்க்க உள்ளோம். இதை பிடிக்காது என்று எவருமே சொல்ல மாட்டார்கள். அந்த அளவிற்கு இதன் சுவை அட்டகாசமாக இருக்கும். அதுமட்டுமின்றி, இந்த காய்கறி ஊத்தப்பம் சாப்பிடுவதற்கு சுவையாகவும், செய்வது அதற்கு மிகவும் எளிமையாகவும் இருக்கும். மற்றும் இது ஆரோக்கியமானதும் கூட. குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு இது ரொம்பவே நல்லது. சரி வாருங்கள்.. இந்த சத்தான காய்கறி ஊத்தப்பம் ரெசிபி எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:  15 நிமிடத்தில் சத்தான மொறு மொறு ஓட்ஸ் தோசை.. டயட்டில் இருப்பவர்களுக்கு ரொம்பவே நல்லது..!

தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி - 2 கப்
உளுந்தம் பருப்பு - 1/2 கப்
வெந்தயம் - 1/2 ஸ்பூன்
அவல் - 1 கப்
கேரட் - 1  (பொடியாக நறுக்கியது)
கேப்ஸிகம் - 1  (பொடியாக நறுக்கியது)
பெரிய வெங்காயம் - 1  (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1  (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - 1 துண்டு (துருவியது)
மிளகாய் - 1  (பொடியாக நறுக்கியது)
கருவேப்பிலை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி - சிறிதளவு  (பொடியாக நறுக்கியது)
உப்பு - சுவைக்கு ஏற்ப
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு

இதையும் படிங்க: 1 கப் ரவை இருக்கா..? காலை டிபனுக்கு குழந்தைகளுக்கு பிடிச்ச பன் தோசை செஞ்சி கொடுங்க.. 

செய்முறை:

  • முதலில் ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்த இட்லி அரிசி, உளுந்தம் பருப்பு மற்றும் வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து நன்கு கழுவி, பிறகு அது மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி சுமார் 5 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • 5 மணி நேரம் கழித்து பிறகு அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து மிருதுவாக அரைத்து தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
  • பிறகு அதே மிக்ஸி ஜாரில் அவலையும் சேர்த்து மென்மையாக அரைக்கவும்.
  • தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த அவலை ஏற்கனவே அரைத்து வைத்த இட்லி மாவுடன் சேர்த்து நன்றாக கலக்கவும். இதில் இதில் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கி பிறகு அதை மூடி வைத்து சுமார் 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
  • மறுபுறம் பொடியாக நறுக்கி வைத்த வெங்காயம், கேரட், குடைமிளகாய், தக்காளி, பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்றாக கலக்கவும். இதனுடன் தேவையான அளவு உப்பையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  • இப்போது அடுப்பில் தோசை கல்லை வைத்து சூடானதும், தயாரித்து வைத்த மாவை வழக்கமான மசாலா தோசை விட சற்று தடிமனாக வட்ட வடிவில் ஊத்தவும். பிறகு அதன் மேல் கலந்து வைத்த காய்கறி கலவையை ஒரே சீராக மேலே பரப்பி விடவும். பின் ஊத்தப்பத்தின் விளிம்பை சுற்றி எண்ணையை ஊற்றவும். பிறகு ஒரு தோசை மூடியை கொண்டு அதை மூடி வையுங்கள். அப்போதுதான் காய்கறிகள் ஆவியில் நன்றாக வேகும். பிறகு இரண்டு பக்கமும் நன்றாக பிரட்டி போட்டு எடுக்கவும். 

அவ்வளவுதான் அருமையான ருசியில் சத்தான காய்கறி ஊத்தப்பம் ரெடி. இந்த காய்கறி ஊத்தப்பத்துடன்
விரும்பிய சட்னியுடன் வைத்து சாப்பிடலாம்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

click me!