மத்திய அரசின் ஜிஎஸ்டி மீதான திருத்தத்திற்கு வரவேற்பு தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுரை வழங்கி உள்ளார்.
ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள மாற்றங்களுக்கு தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வரவேற்பு தெரிவித்திருந்தார். அவர் வெளியிட்டிருந்த சமூக வலைதளப்பதிவில், “அதிமுக சார்பாக, #GST கவுன்சிலின் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகளை நான் முழு மனதுடன் வரவேற்கிறேன். மாற்றத்தை ஏற்படுத்தும் சீர்திருத்தங்களை வழிநடத்துவதில் தொலைநோக்குத் தலைமைத்துவம் வகித்ததற்காக மாண்புமிகு பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கும், எளிமைப்படுத்தப்பட்ட மற்றும் வளர்ச்சி சார்ந்த GST கட்டமைப்பை உறுதி செய்வதில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டதற்காக நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்களுக்கும் எனது நன்றிகள்.
24
இரண்டு அடுக்குகளாக மாற்றப்பட்ட GST
அத்தியாவசியப் பொருட்கள், சுகாதாரம், வேளாண் உள்ளீடுகள் மற்றும் காப்பீடு ஆகியவற்றில் இரண்டு அடுக்குகளுக்கு (5% & 18%) நிவாரணம் வழங்குவது எளிமை, நியாயம் மற்றும் முன்னேற்றத்தை உறுதி செய்கிறது” என்று குறிப்பிட்டு இருந்தார்.
34
நிதி பகிர்வு குறித்து ஒரு வரி கூட குறிப்பிடாத எடப்பாடி
இந்நிலையில் பழனிசாமியின் சமூக வலைதளப்பதிவை டேக் செய்துள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு, “#NextGenGST நடவடிக்கை இணக்கத்தை எளிதாக்கும், நுகர்வோர் நம்பிக்கையை அதிகரிக்கும் மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கும்.
அதிமுக தலைவர் திரு. எடப்பாடி பழனிசாமி பாஜகவின் குரலாக மாறிவிட்டார் என்பதற்கான சான்றாக இந்தப் பதிவை நான் கருதுகிறேன். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி விதிமுறைகளை நீங்கள் உற்சாகமாகப் பாராட்டும்போது, மாநில வருவாயைப் பாதுகாக்கவும், மாநிலங்களின் நிதி சுயாட்சியைப் பாதுகாக்கவும் மத்திய அரசு முறையான நிதிப் பகிர்வு அல்லது வருவாய் வாய்ப்புகளை உறுதி செய்ய வேண்டும் என்று ஏன் ஒரு வரியில் கூட நீங்கள் குறிப்பிடவில்லை? தமிழ்நாடு போன்ற முற்போக்கான மாநிலங்கள், நாட்டின் வளர்ச்சிக்கு தங்கள் பங்களிப்பைத் தக்கவைக்க வலுவான நிதி உதவியைப் பெற வேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
தமிழர்களின் நலனையும், உரிமையையும் புறக்கணிக்கிறீர்களா?
ஒரு தலைவராக, தமிழ்நாட்டின் நலன்களைப் பாதுகாக்க மத்திய அரசிடமிருந்து தெளிவான உறுதிப்பாட்டை நீங்கள் ஏன் கோரவில்லை? தமிழ்நாட்டின் உரிமைகள் மற்றும் கூட்டாட்சி நீதிக்காக உங்கள் குரலை உயர்த்துங்கள்! தேர்தல்கள் நெருங்கி வரும் வேளையில், பாஜகவுடன் கூட்டணி அமைத்து, தமிழக மக்களின் நிதி நலனையும் உரிமைகளையும் புறக்கணிக்கிறீர்களா?” என்று குறிப்பிட்டுள்ளார்.