இந்த வார TOP 10 செய்திகள்: விஜயை விமர்சித்த ஸ்டாலின்.. பதவி விலக விரும்பும் சுரேஷ் கோபி!

Published : Oct 17, 2025, 10:47 PM IST

தவெகவை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின், கரூர் வழக்கு சிபிஐக்கு மாற்றம், ஆந்திராவில் கூகுள் பிரம்மாண்ட AI டேட்டா சென்டர், கர்நாடகாவில் பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு உள்ளிட்டவை இந்த வாரத்தின் TOP 10 செய்திகள் தொகுப்பில் உள்ளன.

PREV
111
சட்டசபையில் தவெகவை வறுத்தெடுத்த முதல்வர்

கரூர் அசம்பாவிதம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டமன்றத்தில் விளக்கம் அளித்து தமிழக வெற்றி கழகத்தை விமர்சித்தார். அப்போது அவர் கூறுகையில், “பகல் 3 மணி முதல் இரவு 10 மணி வரை பாதுகாப்பு வழங்குமாரு காவல் நிலையத்தில் அனுமதி கோரப்பட்டது. அக்கட்சியின் தலைவர் மாலை 7 மணியளவில் தான் கட்சியின் தலைவர் வந்து சேர்ந்தார். மிகவும் தாமதமாக வந்து சேர்ந்ததே அசம்பாவிதத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது" என்றார்.

"சம்பவம் நடைபெறுவதற்கு இரு தினங்களுக்கு முன்பு தான் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதே பகுதியில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 12000 முதல் 15000 தொண்டர்கள் பங்கேற்றிருந்தனர். அவர்கள் மிகவும் கட்டுக்கோப்போடு நடந்து கொண்டனர்" என்றும் கூறினார்.

211
ஜகா வாங்கிய பிரஷாந்த் கிஷோர்

ஜன் சுராஜ் நிறுவனர் பிரசாந்த் கிஷோர், வரவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று புதன்கிழமை அறிவித்தார்.

இந்தத் தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. "கட்சியின் மற்ற வேட்பாளர்களின் வெற்றிக்காக நான் பணியாற்ற வேண்டும் என்று கட்சியின் உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளனர், அதனால் நான் தேர்தலில் போட்டியிடவில்லை," என்று கிஷோர் தெரிவித்துள்ளார்.

311
அமெரிக்காவின் 'கோல்டன் டோமை' மிஞ்சும் சீனா!

உலகம் முழுவதும் இருந்து எதிரிகளின் தாக்குதலைத் தடுக்கும் ஏவுகணை தடுப்பு அமைப்பை சீனா உருவாக்கி வருகிறது. அதற்கான முன்மாதிரியை தற்போது உருவாக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது அமெரிக்காவின் 'கோல்டன் டோம்' (Golden Dome) ஏவுகணை பாதுகாப்புத் திட்டத்தைப் போன்றது எனக் கூறப்படுகிறது.

‘அபாயங்களை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கும் இந்த அமைப்பு, உலகின் எந்தப் பகுதியில் இருந்தும் சீனா மீது ஏவப்படும் ஆயிரம் ஏவுகணைகளை ஒரே நேரத்தில் கண்காணிக்கும் திறன் கொண்டது என்று சீனாவில் இருந்து வெளியாகும் 'சவுத் சீனா மார்னிங் போஸ்ட்' பத்திரிகை தெரிவித்துள்ளது.

411
தீபாவளி பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு

தீபாவளித் திருநாளன்று பட்டாசுகளை வெடிப்பதற்கு இரண்டு மணி நேரம் மட்டுமே அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பொதுநலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு 2018 ஆம் ஆண்டு முதல் தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிப்பதற்கு நேரத்தை நிர்ணயம் செய்து அனுமதி வழங்கி வருகிறது. அதன்படி, இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை தினத்தன்று, கடந்த ஆண்டுகளைப் போலவே காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

511
ஆந்திராவில் பிரமாண்டமான AI டேட்டா சென்டர்!

கூகுள் நிறுவனம், ஆந்திராவில் தனது மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டேட்டா சென்டர் மையத்தை அமைக்கவுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ. 1,25,000 கோடி முதலீட்டில் உருவாகும் இந்த மையம், கடலுக்கடி இணைய இணைப்புக்கான முனையமாகவும் செயல்படும்.

இது குறித்து கூகுள் கிளவுட் உலகளாவிய தலைமைச் செயல் அதிகாரி தாமஸ் குரியன் கூறுகையில், “விசாகப்பட்டினத்தில் பல ஜிகாவாட் திறன் கொண்ட புதிய ஏஐ மையத்தை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இது அமெரிக்காவிற்கு வெளியே கூகுள் முதலீடு செய்ய உள்ள மிகப்பெரிய ஏஐ மையமாகும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் 15 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 1,25,000 கோடி) மூலதன முதலீட்டில் இந்த மையம் பல ஜிகாவாட் அளவுக்கு விரிவாக்கப்படும்,” என்று தெரிவித்தார்.

611
கரூர் வழக்கில் சிபிஐ விசாரணை

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து உத்தரவிட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவை வரவேற்கும் விதமாக, தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் "நீதி வெல்லும்" என்று பதிட்டார்

711
சுரேஷ் கோபி பதவி விலக விருப்பம்

மத்திய இணையமைச்சராகப் பதவி வகிக்கும் பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி, தனக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என்றும், வருமானம் வெகுவாகக் குறைந்துவிட்டதால், மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தி அதிகம் சம்பாதிக்கவே விரும்புவதாகவும் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

திருச்சூர் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று, பெட்ரோலியத் துறை இணையமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் சுரேஷ் கோபி, அக்டோபர் 12 அன்று கண்ணூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் அமைச்சர் பதவி குறித்த தனது மனநிலையைத் தெளிவாகப் பேசினார்.

811
இந்திரா காந்தி செய்த தவறு!

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் உத்தரவின்படி மேற்கொள்ளப்பட்ட 'ஆபரேஷன் புளூ ஸ்டார்' ராணுவ நடவடிக்கை தவறான ஒன்று என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தான் செய்த அந்தத் தவறுக்காக இந்திரா காந்தி தனது உயிரையே விலையாகக் கொடுத்தார் என்றும் சிதம்பரம் தெரிவித்திருக்கிறார். முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் இமாச்சலப் பிரதேசத்தில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டபோது இவ்வாறு பேசியுள்ளார்.

அப்போது அவர் பேசுகையில், "முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மேற்கொண்ட 'ஆபரேஷன் புளூ ஸ்டார்' என்ற ராணுவ நடவடிக்கை தவறு. இந்த நடவடிக்கையின் விளைவாகவே அவருடைய உயிர் பறிபோனது," என்று அவர் கூறினார்.

911
இருமல் மருந்து நிறுவன உரிமையாளர் கைது

20 குழந்தைகளின் மரணத்திற்கு காரணமாக அமைந்த கோல்ட்ரிப் இருமல் மருந்தை தயாரித்த நிறுவனத்தின் உரிமையாளர் எஸ்.ரங்கநாதன் இன்று அதிகாலை சென்னையில் கைது செய்யப்பட்டார்.

1011
கர்நாடகாவில் மாதவிடாய் விடுப்பு

கர்நாடகாவில் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு மாதந்தோறும் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு அளிக்கும் புதிய கொள்கைக்கு (Menstrual Leave Policy 2025) கர்நாடக அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

ஆடை உற்பத்தி நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப (IT) நிறுவனங்கள் உட்பட அரசு மற்றும் தனியார் துறைகள் அனைத்திலும் பணிபுரியும் பெண்கள் இனி மாதத்திற்கு ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு எடுத்துக்கொள்ளலாம்.

1111
UPI மூலம் பள்ளிக் கட்டணம் செலுத்தலாம்

இனி பள்ளிக் கட்டணம் செலுத்த நீண்ட வரிசையில் நிற்கத் தேவையில்லை. ஒரு எளிய யு.பி.ஐ (UPI) ஸ்கேன் மூலம் கட்டணம் செலுத்தும் வசதியை நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளும் கட்டாயமாக அமல்படுத்த வேண்டும் என்று மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை உத்தரவிட்டுள்ளது.

மத்திய கல்வி அமைச்சகம், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் சி.பி.எஸ்.இ. (CBSE), என்.சி.இ.ஆர்.டி. (NCERT) போன்ற கல்வி அமைப்புகளுக்கும் இது குறித்து ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அதில், பள்ளி நிர்வாகத்தில் பணம் கையாளும் முறையை நவீனமயமாக்கும் வகையில் டிஜிட்டல் கட்டண முறைகளை, குறிப்பாக யு.பி.ஐ. முறையைப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories