வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலய திருவிழாவிற்கு பக்தர்களின் வசதிக்காக 1050 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 10 வரை பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். ஆன்லைன் முன்பதிவு வசதியும் செய்யப்பட்டுள்ளது.
வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலய திருவிழாவானது ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 8 வரை 10 நாட்கள் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டும் கொண்டாட்டத்திற்கு வேளாங்கண்ணி தயாராகி வருகிறது. இந்த திருவிழா ஆகஸ்ட் 29 அன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த விழாவில் பங்கேற்க இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். ஒவ்வொரு நாளும் மாலையில் தேர் பவனி நடைபெறுகிறது,
24
வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில், பேருந்து
இந்த திருவிழாவையொட்டி சென்னை, கன்னியாகுமரி, மதுரை, கொச்சி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து பக்தர்கள் காவி உடை அணிந்து பாதயாத்திரையாக வேளாங்கண்ணிக்கு வருகின்றனர். இந்த நிலையில் இந்த திருவிழாவிற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இதற்கான அறிவிப்பும் வெளியாகியுள்ளது. தற்போது சிறப்பு பேருந்துக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு 1050 சிறப்பு பேருந்துகள் 27/08/2025 முதல் 10/09/2025 வரை இயக்கப்பட உள்ளது.
34
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பேருந்து
இத்திருவிழாவை முன்னிட்டு இந்த ஆண்டும் பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம். தமிழ்நாடு லிமிடெட் மூலமாக சென்னை, பெங்களூரு, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் ஆகிய ஊர்களிலிருந்தும் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலமாக திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், பாண்டிச்சேரி, திண்டுக்கல், மணப்பாறை, ஓரியூர் மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய ஊர்களிலிருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு பேருந்துகள் 27/08/2025 முதல் 10/09/2025 வரை இயக்கப்பட உள்ளது.
இதன் காரணமாக, பயணிகளின் வசதிக்காக தொலைதூரங்களில் இருந்து இயக்கப்படும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் www.tnstc.in மற்றும் tnstc official app மூலம் முன்பதிவு செய்து வேளாங்கண்ணி செல்லவும் மற்றும் அங்கிருந்து பயணிகள் திரும்பும் வகையில் பயணம் செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி குழுவாக பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையிலும் பேருந்து இயக்கப்படுகின்றன. மேற்படி சேவையை வேளாங்கண்ணி செல்லும் பக்தர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.