SP Velumani Tender Scam Case: கடந்த அதிமுக ஆட்சியில் டெண்டர் முறைகேடு செய்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், தற்போது புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதனால், அவருக்கு எதிராக மீண்டும் வழக்குத் தொடர சபாநாயகர் அனுமதி.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி சென்னை, கோவை மாநகராட்சிகளில் சாலைப் பணிகள் மேற்கொள்ள உறவினர்கள், நெருக்கமானவர்களுக்கு, டெண்டர் வழங்கியதில் 98 கோடியே 25 லட்சம் ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்ததாக ஆர்.எஸ்.பாரதி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார். அதைத்தொடர்ந்து, வேலுமணி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எஸ்.பி.வேலுமணி தரப்பு தனக்கு எதிராக எந்த வித ஆதரமும் இல்லையென நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
24
சென்னை உயர்நீதிமன்றம்
இதனையடுத்து எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை எனக்கூறி, அவருக்கு எதிரான வழக்கை மட்டும் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் முறைகேடு தொடர்பாக ஆதாரங்களை சேகரித்தால், எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக மீண்டும் வழக்கு தொடரலாம் என தெரிவித்திருந்தது. இந்த பின்னணியில், ஒப்பந்த முறைகேடு தொடர்பாக, அரசு அதிகாரிகள், தனியார் நிறுவனங்களுக்கு எதிரான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என புகார்தாரரான அறப்போர் இயக்கம் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு மீண்டும் விசாரணை வந்தது.
34
வேலுமணி பெயர் மீண்டும் சேர்ப்பு
அப்போது, லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் மனுவில், முன்னாள் அமைச்சர் வேலுமணி பெயர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதால் வழக்குத் தொடர சபாநாயகர் அனுமதி வழங்கி உள்ளார். மேலும், ஐஏஎஸ் அதிகாரிகளான கே.எஸ். கந்தசாமி, மற்றும் கே.விஜயா கார்த்திகேயன் ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடர மத்திய அரசு இன்னும் அனுமதி அளிக்கவில்லை என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் பதில் மனுவுக்கு பதில் அளித்து அறப்போர் இயக்கம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு பதில் அளிக்க காவல்துறை தரப்பில் அவகாசம் கோரியதையடுத்து இந்த வழக்கின் இறுதி விசாரணையை அக்டோபர் 13-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.