Published : Sep 14, 2024, 06:45 AM ISTUpdated : Sep 14, 2024, 06:47 AM IST
School Education Department: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையைப் பொய்யாகக் காட்டி, அரசுத் திட்டங்களில் மோசடி செய்ததாக தலைமை ஆசிரியர் உட்பட இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஒன்றியத்தை அடுத்துள்ள பம்மதுகுளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக லதா இருந்து வந்தார். 230 மாணவர்கள் படிக்க கூடிய பள்ளியில் 566 மாணவ மாணவியர் படிப்பதாகவும், அவர்களில் தினசரி 432 பேர் பள்ளிக்கு வருவதாகவும் கணக்கு காட்டியுள்ளார். இதற்கு ஏற்றார் போல கூடுதல் ஆசிரியர்களை பெற்று, ஆசிரியர் அல்லாத பணியிடங்களை அவர் நிரப்பியுள்ளார்.
25
School Headmaster
கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு மேற்கொண்ட போது 266 மாணவர்கள் மட்டுமே அன்று வருகை புரிந்துள்ளனர். வருகை பதிவேட்டைவிட மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், சந்தேகமடைந்த அதிகாரிகள் இதுகுறித்து விசாரித்தனர். அப்போது பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. ஆசிரியர்களின் எண்ணிக்கையை தக்க வைத்து கொள்வதற்காக, போலியாக மாணவர்களின் எண்ணிக்கையை அதிகமாக பதிவிட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், EMIS-ல் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், 8 ஆசிரியர்கள் இருக்க வேண்டிய பள்ளியில் 16 ஆசிரியர் இருந்ததாக கூறப்படுகிறது. இதோடு மட்டுமல்லாமல் மாணவர்கள் பெயரில் பள்ளிக் கல்வித் துறையின் பல்வேறு விலையில்லாத திட்டங்களையும், சத்துணவு பொருட்களையும் பெற்று முறைகேட்டில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் பள்ளிக்கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
45
School Headmaster Suspended
இந்த மோசடி மற்றும் முறைகேடுகள் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்தது தெரியவந்தது. இதனால் தமிழக அரசுக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியை லதா மற்றும் இதனை முறையாக கண்காணிக்காத வட்டார உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மேரி ஜோசப் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதேபோல் தமிழகம் முழுவதும் பல பள்ளிகளில் போலியாக மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்தி காட்டி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கக்கூடிய பள்ளிகளில் ஆய்வு செய்ய வேண்டும். எமிக்ஸ் தளத்தில் இருக்கக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கையும், வருகை பதிவேடும் ஒத்துபோகிறதா, உண்மையிலேயே அந்த பள்ளியில் குறிப்பிட்டுள்ள மாணவர்கள் இருக்கிறார்களா அல்லது கூடுதலாக பொய் கணக்கு காண்பிக்கப்படுகிறதா என்பதை சரிபார்த்து அறிக்கை தயார் செய்து பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.