Tasmac : தமிழகத்தில் மதுக்கடைகளில் காலி பாட்டில்களைத் திரும்பப்பெறுவதற்கு டாஸ்மாக் நிர்வாகம் தற்போது புதிய முயற்சியாக காலி மது பாட்டில்களைத் தானாகவே பெற்றுக்கொள்ளும் தானியங்கி இயந்திரங்களைச் சோதனை முறையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தத் தானியங்கி இயந்திரத்தைப் பயன்படுத்த இரண்டு முக்கிய வழிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன:
1. கைப்பேசி எண் மற்றும் OTP முறை: இயந்திரத்தில் தங்களது கைப்பேசி எண்ணைப் பதிவு செய்து, வரும் OTP-ஐ உள்ளீடு செய்ய வேண்டும். பின், காலி பாட்டிலில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்து, இயந்திரத்தில் பாட்டிலைச் செலுத்தினால், அதற்கான ரூ.10 தொகை நேரடியாக வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
2. UPI செயலி முறை: பயனாளர்கள் தங்களது UPI செயலி மூலம் இயந்திரத்தில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்து, பிறகு பாட்டிலில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்து இயந்திரத்தில் செலுத்த வேண்டும். சரிபார்க்கப்பட்டதும், அதற்கான பணம் வங்கிக் கணக்கில் சேரும்.
முதற்கட்டமாக, சென்னை எழும்பூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் இந்த இயந்திரம் சோதனை அடிப்படையில் நிறுவப்பட்டுள்ளது. இந்தச் சோதனை முயற்சி வெற்றிகரமாகச் செயல்படும் பட்சத்தில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளிலும் இந்த இயந்திரங்கள் நிறுவப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் திட்டம் அமலுக்கு வரும்போது, பாட்டில்களைத் திரும்பப் பெறுவதில் ஊழியர்களுக்கு ஏற்படும் பணிச்சுமை குறைவதுடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.