TN Weather: தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மதுரை, கரூர் போன்ற மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டியுள்ளது. வரும் நாட்களில் வெப்பநிலை மேலும் உயரக்கூடும்.
தமிழகத்தில் மார்ச் மாதம் தொடங்கியதில் இருந்து கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மதுரை, கரூர், வேலூர், ஈரோடு, சேலம் போன்ற மாவட்டங்களில் 100 டிகிரி தாண்டி வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் செல்வதற்கே அலறுகின்றனர்.
25
அதிக தண்ணீர் குடிக்க அறிவுறுத்தல்
இதனால் சுகாதாரத்துறை தரப்பில் பொதுமக்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. அதாவது மதியம் 12 மணி முதல் 3 மணி வரை நேரடியாக வெயிலில் செல்வதைத் தவிர்க்கவும், தாகம் இல்லாவிட்டாலும் போதிய அளவு தண்ணீர், இளநீர், மோர் போன்றவற்றை அருந்தவும், மெல்லிய பருத்தி (Cotton) ஆடைகளை அணிய வேண்டும். குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
35
கனமழை எச்சரிக்கை
இந்நிலையில் வரும் நாட்களில் மேலும் வெயில் அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது மன்னார் வளைகுடா முதல் வடக்கு உள் கர்நாடகா வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 26ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதேபோல் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் மற்ற இடங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவித்துள்ளது.
மார்ச் 28 முதல் 30 வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என கணித்துள்ளது.
வெயில் அதிகரிக்கும்
மார்ச் 26 முதல் 28 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும் என தெரிவித்துள்ளது.
55
சென்னை வானிலை அப்டேட்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.