Published : Apr 11, 2025, 03:42 PM ISTUpdated : Apr 11, 2025, 03:45 PM IST
திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து பொன்முடி நீக்கப்பட்ட நிலையில், அவர் அமைச்சர் பதவியில் நீடிக்க தகுதியற்றவர் என வானதி சீனிவாசன் காட்டமாக கூறியுள்ளார்.
திமுக துணை பொதுச்செயலாளரும், வனத்துறை அமைச்சருமான பொன்முடி சைவ வைணவ சமயங்களை மட்டுமல்ல பெண் இனத்தையும் இழிவுபடுத்தும் அளவுக்கு ஆபாசமாக பேசியது சர்ச்சையானது. இதற்கு திமுக எம்.பி. கனிமொழி தனது கண்டனத்தை தெரிவித்திருந்த நிலையில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இந்நிலையில் திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவியில் நீடிக்க தகுதியற்ற ஒருவர், எப்படி அமைச்சர் பதவியில் இருக்க முடியும்? வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
25
Vanathi Srinivasan
அறுவெறுக்கத்தக்க வகையில் பேசிய பொன்முடி
இதுகுறித்து தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வெளியிட்டுள்ள அறிக்கையில்: பொன்முடி மீது சட்ட நடவடிக்கை எடுக்காமல், கட்சிப் பதவியில் இருந்து மட்டும் நீக்கி கண்துடைப்பு நாடகம் நடத்துவதை ஏற்க முடியாது. விழுப்புரத்தில் நடைபெற்ற தந்தை பெரியார் திராவிடர் கழக நிகழ்ச்சியில் பேசிய, திமுக துணைப் பொதுச்செயலாளரும், வனத்துறை அமைச்சருமான க.பொன்முடி, விலைமாதர் - வாடிக்கையாளர் இடையே நடந்த உரையாடலை, இந்து மதத்தின் சைவ, வைணவத்தின் புனித சின்னங்களுடன் ஒப்பிட்டு, அறுவெறுக்கத்தக்க வகையில் பேசியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
35
CM Stalin
மக்களை ஏமாற்ற நினைக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்
அமைச்சர் பொன்முடி பேசியதை வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு மிக கேவலமாகப் பேசியுள்ளார். இது கடும் கண்டனத்திற்குரியது. இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து பேசிய பொன்முடி, எந்தப் பதவி வகிக்கவும் தகுதி அற்றவர். ஆனால், அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்காமல், திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து மட்டும் நீக்கி, தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற நினைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்
திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் நீடிக்க தகுதியற்ற ஒருவர், எப்படி அமைச்சர் பதவியில் இருக்க முடியும்? எனவே, பொன்முடியை வனத்துறை அமைச்சர் பதவியில் இருந்து உடனே நீக்க வேண்டும்.
அமைச்சர் பொன்முடி பேசியது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உண்மையிலேயே வருத்தப்பட்டால், அவரை கட்சியிலிருந்தே நீக்க வேண்டும். பெண்களையும், இந்து மதத்தையும் அவமானப்படுத்திய அமைச்சர் பொன்முடி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்குப் பதிலாக பொன்முடியை கட்சிப் பதவியிலிருந்து மட்டும் நீக்கி கண்துடைப்பு நாடகம் நடத்துவதை ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.