Palani Murugan Temple: பழனி தண்டாயுதாபாணி முருகன் கோயில் 2025-2026 ஆண்டிற்கான அர்ச்சகர், ஓதுவார், வேதசிவாகம மற்றும் தவில் இசைப் பயிற்சி வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கையை அறிவித்துள்ளது.
இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குறிப்பிட்ட கோயில்களில் அர்ச்சகர், ஓதுவார் உள்ளிட்ட பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்த பயிற்சி வகுப்புகளில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பழனி தண்டாயுதாபாணி முருகன் கோயிலில் அர்ச்சகர், ஓதுவார் பயிற்சி வகுப்பில் சேருவது தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
25
பழனி முருகன் கோயிலில் அர்ச்சகர் பயிற்சி
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைத்துறை பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் சார்பில் நடைபெறும் அர்ச்சகர் பயிற்சி பள்ளி மற்றும் ஓதுவார் பயிற்சி பள்ளிகளில் 2025-2026 ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இளநிலை அர்ச்சகர் சான்றிதழ் ஓராண்டு பயிற்சியும், ஓதுவார் பள்ளியில் மூன்றாண்டு பயிற்சியும், பகுதிநேரம் நான்காண்டு பயிற்சியும் வழங்கப்படும். பழனி முருகன் கோயிலில் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் சேர 8ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பை பொறுத்தவரை 14 முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். அர்ச்சகர் பயிற்சி காலம் ஓராண்டு ஆகும்.
பழனி முருகன் கோயிலில் ஓதுவார் பயிற்சி பள்ளியில் சேர 8ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது பொறுத்தவரை 14 வயதிற்கு மேல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். ஓதுவார் பயிற்சி முழு நேரமாக 3 ஆண்டுகளும், 4 ஆண்டுகளும் பயிற்சி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேதசிவாகம பாடசாலை
வேத சிவாகம பாடசாலை சேர 5ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 12 வயது முதல் 16 வயதுக்குள் இருக்க வேண்டும். பாடசாலை காலம் 5 ஆண்டுகளாக இருக்க வேண்டும்.
இசைப் பயிற்சி நிலையம்
பழனி முருகன் கோயிலில் தவில் இசைப் பயிற்சி நிலையத்தில் சேர 8ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 13 வயது முதல் 16 வயதுக்குள் இருக்க வேண்டும். பயிற்சி காலம் 3 ஆண்டுகளாகும்.
பழனி முருகன் கோயிலில் ஓதுவார், அர்ச்சகர் போன்ற பயிற்சிக்கு ஒவ்வொரு மாணவருக்கும் மாதம் ஒன்றுக்கு முழு நேர பயிற்சிக்கு ரூ.10,000 பகுதி நேர பயிற்சிக்கு ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சி காலம் முடியும் வரை, இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும். பயிற்சி காலத்தில் உணவு, உடை, தங்குமிடம், மருத்துவ வசதி திருக்கோயில் மூலம் கட்டணமில்லாமல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
55
விண்ணப்பிக்கும் முறை
பழனி முருகன் கோயிலில் ஓதுவார், அர்ச்சகர் பயற்சியில் சேர விருப்பப்படுபவர்கள் palanimurugan.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
உங்களுடைய விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி இணை ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனி. 624 601 என்ற முகவரிக்கு விண்ணப்ப படிவத்தை அனுப்ப வேண்டும். மேலும் விபரங்களுக்கு 6383031350 மற்றும் 9942111960 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.