இந்த விலை உயர்வை தமிழ்நாடு பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச் சங்கம் கடுமையாகக் கண்டித்துள்ளது. இது தொடர்பாக அந்தச் சங்கம் கூறுகையில், "கோடை மழை பொய்த்ததால் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய அண்டை மாநிலங்களிலும் பால் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தையில் கடும் பால் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது" என்று எச்சரித்துள்ளது.
பால் கொள்முதலுக்கான போட்டியில் தனியார் நிறுவனங்கள் அதிக விலையும், கூடுதல் சலுகைகளையும் வழங்குவதால், ஆவின் பால் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு வந்த பால் விநியோகம் குறைந்துள்ளதாகச் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். ஆவினின் தினசரி பால் கொள்முதல் அளவு சுமார் 25 லட்சம் லிட்டராகக் குறைந்துள்ளதாகவும், அது இன்னும் மீளவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.