இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 8 தமிழக மீனவர்களை மீட்க மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இலங்கை அதிகாரிகளுடன் தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 8 தமிழக மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகையும் பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வர வேண்டும் என்றும், மீன்பிடி தொடர்பான பிரச்சினைகளைக் கையாள்வதில் கட்டுப்பாடு மற்றும் பரஸ்பர புரிதலை உறுதி செய்ய இலங்கை அதிகாரிகளுடன் உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜூன் 29, 2025) மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
24
தமிழக மீனவர்கள்
முதலமைச்சர் ஸ்டாலின் தனது கடிதத்தில், இந்திய மீனவர்கள், குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பையும் கடுமையாக பாதிக்கும் இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கை குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரின் கவனத்தை ஈர்த்துள்ளார். ஜூன் 29, 2025 அன்று இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்களுடன், IND-TN-10-MM-773 பதிவு எண் கொண்ட அவர்களது இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகையும் சிறை பிடித்துள்ளதாக வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
34
முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை
இத்தகைய கைது நடவடிக்கைகள் மீனவர்களுக்கு நிதி இழப்பிற்கும், நீண்டகால சட்ட நடவடிக்கைகளுக்கும் வழிவகுப்பதோடு, படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் சிறை பிடிக்கப்படுவதால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துகின்றன என்று முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களது படகையும் பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வருவதை உறுதி செய்ய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் உடனடியாகத் தலையிட வேண்டும் என்று தனது கடிதத்தில் முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், வருடாந்திர மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்து, மீன்பிடிப் பருவம் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், நமது மீனவர்கள் வாழ்வாதாரம் ஈட்டும் நம்பிக்கையுடன் மீன்பிடிக்க கடலுக்குத் திரும்பியுள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இச்சூழலில், மீன்பிடி தொடர்பான பிரச்சினைகளைக் கையாள்வதில், கட்டுப்பாடு மற்றும் பரஸ்பர புரிதலை உறுதி செய்ய இலங்கை அதிகாரிகளுடன் உரிய தூதரக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.