
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாத காலம் கூட இல்லாத நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணியை தீவிரப்படுத்தி வருகிறது. தமிழகம் முழுவதும் தொகுதி நிலவரம் தொடர்பாக ஆலோசித்து வருகிறது. அந்த அந்த தொகுதிகளில் செயல் வீரர்கள் கூட்டத்தை நடத்தி ஆலோசனைகளை வழங்கி வருகிறது.
ஆளுங்கட்சியான திமுக அக்கட்சி தலைவரான் ஸ்டாலின் நிர்வாகிகளோடு ஒன் டூ ஒன் மீட்டிங் நடத்தி தொகுதி நிலவரத்தை கேட்டு வருகிறார். அடுத்ததாக ஓரணியில் தமிழகம் என்ற தலைப்பில் வீடு வீடாக சென்று பிரச்சாரத்தையும் தொடங்கி வைத்துள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எதிர்கட்சியான அதிமுகவும் களத்தில் இறங்கியுள்ளது.
அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கோவையில் தனது தமிழகம் மீட்பு பயணத்தை தொடங்கியுள்ளார். இந்த பயணத்தின் முதல் கட்டமாக விவசாயிகள் உள்ளிட்ட அமைப்புகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அடுத்தாக பிரச்சார பேருந்தில் பயணம் செய்து பொதுமக்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில் பொதுமக்களின் கோரிக்கை தொடர்பாகவும், அரசின் மீதான விமர்சனங்களையும் எடுத்துரைத்து வருகிறார். கோவையில் பொதுமக்கள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, கோயிலை கண்டாலே திமுகவிற்கு கண்ணை உறுத்துகிறது.
அதில் இருக்கும் பணத்தை எல்லாம் எடுத்து கல்லூரி கட்ட ஆரம்பிக்கிறார்கள். கோயில் கட்டுவதற்காக நல்ல உள்ளம் படைத்தவர்கள், தெய்வ பக்தி உள்ளவர்கள் உண்டியலில் பணத்தை அள்ளி போடுகிறார்கள். அந்த பணம் அறநிலையத் துறைக்கு சேர்கிறது. இந்த பணத்தை வைத்து அந்த கோயிலில் பல்வேறு திட்டங்களை அபிவிருத்தி செய்வதற்காக தான். ஆனால் தமிழக அரசு அந்த பணத்தை எடுத்து கல்லூரி கட்டுகிறார்கள் என விமர்சித்தார்.
வேண்டுமென்றே அறநிலையத்துறை நிதியை எடுத்து செலவு செய்வது எந்த விதத்தில் நியாயம்? இதை எல்லாம் சதி செயலாக தான் மக்கள் பார்க்கிறார்கள். என எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார். இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் பதிலடி கொடுத்தனர். கல்விக்காக கல்லூரி கட்ட எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்தது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனவும், பாஜகவுடன் கூட்டணி வைத்த பிறகு முழுமையாக பாஜக ஆதரவாளராகவே மாறிவிட்டார் எனவும் விமர்சித்து இருந்தனர். மேலும் மாணவர்களும் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனையடுத்து கோயில் நிதியில் கல்லூரி கட்ட எதிர்ப்பு தெரிவித்தது ஏன் என இபிஎஸ் விளக்கம் அளித்துள்ளார்.
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இரண்டு நாள் பயணமாக விழுப்புரம் மாவட்டத்திற்கு வந்த அவர் கரும்பு விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தி கோரிக்கை மனுவை பெற்றார். அதனை தொடர்ந்து விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து நான்கு முனை சந்திப்பு வரை மக்களோடு மக்களாக நடந்து குறைகளை கேட்டறிந்தார்.
அதன் பின்னர் நான்கு முனை சந்திப்பில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக ஆட்சியில் இரண்டு முறை விவசாயிகள் பயிர் கடன் தள்ளுபடி செய்யபட்டது இரண்டு முறை கடன் தள்ளுபடி செய்த ஒரே அரசு அதிமுக என்றும் மும்முனை மின்சாரம் அதிமுக ஆட்சியில் தான் வழங்கப்பட்டதாகவும் விவசாயத்தை சார்ந்த மாணவர்கள் கல்வி கிடைக்க அறிவித்த அம்மா பல்கலைக்கழகம் அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக ரத்து செய்த அரசாக திமுக உள்ளதாகவும் பல்கலைக்கழகத்தை ரத்து செய்த பொன்முடிக்கு ஆண்டவனே அமைச்சர் பதவியை பறிச்சிட்டதாக கூறினார்.
அடுத்தாக பேசிய அவர், அறநிலையை துறையின் நிதியை எடுத்து கல்லூரியை அமைத்தால் மாணவர்களுக்கு தேவையான முழுமையான நிதி கிடைக்காது என்று கூறினேன் ஆனால் கண்ணு காது வைத்து திரித்து பேசுவதாக தெரிவித்தார். கல்லூரிகள் அமைக்க அறநிலையத்துறை நிதியை கொடுக்க வேண்டாம் என சொல்லவில்லை. மாணவர்களுக்கு தேவையான நிதி அறநிலையத்துறையிடம் இருந்து கிடைக்காது. கல்லூரி வளரும் போது, கட்டடங்கள் கட்ட வேண்டிய நிலையும், பல பிரிவுகள் உருவாக்க வேண்டிய நிலையும் ஏற்படும்.
இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றே தெரிவித்ததாக கூறினார். பொய் பிரச்சாரம் செய்யும் ஸ்டாலின் அரசு பேனா அமைப்பதற்கும் கார் பந்தயம் நடத்துவதற்கு பணம் இருக்கும் போது கல்லூரி கட்டுமாணம் செய்வதற்கு பணம் இல்லையா என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசியவர் தமிழகத்தில் உறுப்பு கல்லூரிகளாக இருந்ததை அரசு கல்லூரியாக மாற்றியது அதிமுக ஆட்சி என்றும் அதிமுக ஆட்சியில் 21 பாலிடெக்னிக் கல்லூரி 4 சட்டக்கல்லூரி ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரி கொண்டுவந்தது அதிமுக ஆட்சியில், திமுக ஆட்சியில் ஒரு மருத்துவ கல்லூரி கூட கொண்டு வர முடியவில்லை என தெரிவித்தார். சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்த அரசாக அதிமுக இருந்து, சிறுபான்மையின மக்களின் அரனாக செயல்பட்டது அதிமுக அரசு என கூறினார்.
தேர்தலுக்கு முன் மக்களின் குறைகளை மனுக்களாக பெற்று மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதாக கூறிய ஸ்டாலின் அதனை தீர்க்கவில்லை. திமுக ஆட்சியில் மக்களின் வரிப்பணத்தில் 200 கோடி ஊழல் செய்துள்ளார்கள் என்றும் ஸ்டாலின் நடத்துவது குடும்ப ஆட்சி 2026 மக்கள் ஆட்சியை அதிமுக நடத்தும் என எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்தார்.