
சிக்கலில் மாட்டிய அழகிரி
திமுக தலைவராக இருந்த கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரிக்கும், அவரது மகன் தயாநிதி அழகிரிக்கும் தென் மாவட்டங்கள் கைவிட்ட நிலையில் வட மாவட்டம் மட்டுமே மறு வாழ்வு கொடுத்துள்ளது. எப்படி என்று தற்போது பார்க்கலாம்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் அமைச்சரவையில் நெடுச்சாலைத்துறை அமைச்சராக பணியாற்றிவர் தா.கிருட்டிணன், இவர் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றியுள்ளார். திமுக தலைவராக இருந்த கருணாநிதியோடு மிகவும் நெருக்கமாக இருந்தவர், கடந்த 2003ஆம் ஆண்டு சிவகங்கை பகுதியில் அதிகாலையில் நடைபயிற்சி சென்ற தா.கிருட்டிணனை மர்ம நபர்கள் வெட்டி படு கொலை செய்தனர். இந்த கொலை சம்பவத்தால் மு.க.அழகிரிக்கு சிக்கல் உருவானது. மு.க.அழகிரிக்கும் தா.கிருட்டிணனுக்கும் இடையே மோதல் தான் கொலைக்கு காரணம் எனக்கூறி மு.க.அழகிரி, மன்னன், எஸ்ஸார் கோபி, ஐ. முபாரக் மந்திரி உள்ளிட்ட 13 பேரை கைது செய்து சிறையில் அடைத்தது போலீஸ்.
விடுதலையை வாங்கி கொடுத்த வேலூர்
இந்த வழக்கு தமிழகத்தில் நடைபெற்று வந்த நிலையில் 2006ஆம் ஆண்டு திமுக ஆட்சியை பிடித்தது. இதனையடுத்து தமிழகத்தில் இந்த வழக்கு நடைபெற்றால் நேர்மையாக நடைபெறாது. எனவே இந்த வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என அதிமுக சார்பாக வலியுறுத்தப்பட்டது. இதன் காரணமாக ஆந்திர மாநிலம், சித்தூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்றது. பல ஆண்டுகள் இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என கூறி 13 பேரையும் 2008, மே 8-ஆம் தேதி சித்தூர் நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் மு.க.அழகிரி தங்கியிருந்தது. வேலூரில் தான். வேலூரில் இருந்து தான் சித்தூர் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு ஆஜராக மு.க.அழகிரி சென்று வருவார்.
திரைத்துறையில் தயாநிதி அழகிரி
மேலும் வேலூரில் இருந்து தான் இந்த வழக்கு தொடர்பாக சட்ட வல்லுநர்களோடு ஆலோசனையில் தொடர்ந்து ஈடுபட்டார். தா.கிருட்டிணன் கொலை வழக்கின் காரணமாக சிறை தண்டனை உறுதியாகிவிடுமோ.? ஜெயிலில் அடைக்கப்படுவோமா என தவிப்பில் இருந்த மு.க.அழகிரிக்கு விடுதலை வாங்கி கொடுத்து காப்பாற்றியது வேலூர் தான். இதோ போல மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரிக்கும் வேலூர் தான் மறு வாழ்வு கொடுத்துள்ளது. கடந்த 2006ஆம் ஆண்டு தமிழகத்தில் ஆளுங்கட்சியாக திமுக இருந்த போது, திரைத்துறையில் காலடி எடுத்துவைத்தவர் தயாநிதி அழகிரி, கிளவுட் நைன் பிக்சர்ஸ் சார்பாக பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். இது மட்டுமில்லாமல் பல தொழில்களையும் தொடங்கியவர், மதுரையில் தயா ஐடி பார்க்கையும் நடத்தி வந்தார்.
உடல்நிலை பாதிக்கப்பட்ட தயாநிதி அழகிரி
2011ஆம் ஆண்டு தமிழிகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு பெரிய அளவில் படம் தயாரிப்பில் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தார். இந்த நிலையில், சென்னை போயஸ் கார்டனிலுள்ள வீட்டில் வசித்து வந்த வந்த தயாநிதி அழகிரி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி திடீரென மயங்கி கீழே விழுந்ததாக கூறப்பட்டது. இதனால் மூச்சு பேச்சு இல்லாமல் இருந்த தயாநிதி அழகிரியை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது அவரது உடல்நிலையை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். மேலும் மூளையில் அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் எந்த வித பெரிய முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதன் காரணமாக சுமார் 6 மாதங்களுக்கு பிறகு வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மறு வாழ்வு கொடுத்த வேலூர்
கடந்த மாதம் மார்ச் 14ம் தேதி வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தயாநிதி அழகிரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பிசியோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்தது. இதில் நாள்தோறும் முன்னேற்றம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் தயாநிதி அழகிரி தொடர்பாக வதந்திகள் பரவிய நிலையில் தற்போது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வீடு திரும்பியுள்ளார். எனவே தயாநிதி அழகிரிக்கு வேலூர் மருத்துவமனை மறு வாழ்வு கொடுத்து காப்பாற்றியுள்ளது. தந்தைக்கும் மகனுக்கும் தென் மாவட்டங்கள் கை விட்ட நிலையில் வட மாவட்டமான வேலூர் தான் ராசியாக தற்போது மாறியுள்ளது.